மறைந்த நடிகர் ராஜேஷ் உடல் ராமாபுரத்தில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு அரசியல் தலைவர்களும் திரை பிரபலங்களும் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மறைந்த ராஜேஷ் உடலுக்கு அஞ்சலி நேரில் செலுத்தினார். அத்துடன் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சீமான், “மிகச் சிறந்த படங்கள் என்று குறிப்பிட்டு சொல்லக் கூடிய படங்களில் அவரது பங்களிப்பு இருக்கும். கன்னிப்பருவங்கள், அச்சமில்லை அச்சமில்லை, பயணங்கள் முடிவதில்லை படங்களை குறிப்பிட்டு சொல்லலாம்.
பழம்பெறும் அறிவியல் அறிஞர்கள், இலக்கிய மேதைகள் பற்றி நமக்கு தெரியாத தகவல்களை திரட்டி தற்போது உள்ள தலைமுறையினருக்கு புத்தகமாக தொகுத்து வழங்கியவர். எனக்கு அவர் பரிசு எனக் கொடுத்தது புத்தகங்கள் தான். ஒன்று இரண்டு அல்ல மூட்டை மூட்டையாக புத்தகங்களை கட்டி பரிசாக அனுப்புவார். அவர் அனுப்பிய புத்தகங்களை வைக்கவே தனி அடுக்ககம் எனது உலகத்தில் உள்ளது.
அவர் அனுப்பும் புத்தகங்கள் பெரும்பாலும் மார்க்சீசிய லெனினிய தத்துவ புத்தகங்களாக இருக்கும். நாங்கள் இருவரும் தெரிவித்துக் கொண்ட போது சினிமாவைப் பற்றி பேசியதை விட இலக்கியம் உலக அரசியல் பற்றி தான் அதிகம் பேசியுள்ளோம்.
அவரிடம் எதுகுறித்து வேண்டுமானாலும் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பேசலாம். அந்த அளவுக்கு அறிவு ஞானம் கொண்டவர். அப்படிப்பட்ட மாமனிதரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர்கள் உறவினர்கள் நண்பர்கள் மற்றும் ரசிகர்களுக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கல் என்று உருக்கமாக பேசினார்.