பிரபல மலையாள நகைச்சுவை நடிகர் கலாபவன் நவாஸ் மர்மமான முறையில் இறந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மலையாள சினிமாவில் பிரபல நகைச்சுவை நடிகர்களில் ஒருவர் கலாபவன் நவாஸ் (51). கடந்த 1995ல் வெளியான சைதன்யம் என்ற திரைப்படத்தில் அறிமுகமானார்.
இந்நிலையில் கலாபவன் நவாஸ், பிரகம்பனம் என்ற மலையாள படத்தில் நடித்து வந்தார். இதன் படப்பிடிப்பு எர்ணாகுளம் அருகே உள்ள சோட்டானிக்கரையில் கடந்த ஒரு மாதமாக நடைபெற்று வந்தது. இதற்காக சோட்டானிக்கரையில் உள்ள ஒரு ஹோட்டலில் கடந்த 25 நாட்களுக்கு மேலாக தங்கியிருந்தார்.
இந்நிலையில் நேற்று ஹோட்டல் அறையில் மயங்கிய நிலையில் கிடந்தார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த ஹோட்டல் ஊழியர்கள் உடனடியாக அவரை மீட்டு அருகிலுள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பரிசோதித்த டாக்டர்கள் கலாபவன் நவாஸ் இறந்து விட்டதாக கூறியுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மாரடைப்பால் இறந்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கலாபவன் நவாஸ் மரணத்திற்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் மற்றும் பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.