ராணி இரண்டாம் எலிசபெத்:காலங்களை கடந்த ஆளுமை

265
Advertisement

1926ஆம் ஆண்டு ஏப்ரல் 26ஆம் தேதி லண்டனில் உள்ள Mayfair மாவட்டத்தில் பிறந்தார் எலிசபெத்.

எலிசபெத்தின் பெரியப்பா எட்டாம் எட்வர்ட் திடீரென தனது பதவியை துறந்ததால், எலிசபெத்தின் தந்தை அரசராக பொறுப்பேற்கும் கட்டாயத்துக்கு தள்ளப்பட்டார்.

தந்தையும் உடல்நலக்குறைவால் மறைந்து விட, இங்கிலாந்தின் நீண்ட காலம் ஆட்சி செய்த பெருமையை பெற்ற அரசி இரண்டாம் எலிசபத் தனது 27 வயதில் இங்கிலாந்து அரசியாக பதவியேற்றார்.

காலனித்துவ கட்டமைப்பில் இருந்து பெரும்பாலான நாடுகள் விடுபட்டு கொண்டிருந்த சவாலான அரசியல் சூழலில் ஆட்சிக்கு வந்த எலிசபெத், நிலைமையை மிக திறமையாக கையாண்டார் என்றே அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

இங்கிலாந்துடன் வரலாற்று தொடர்புள்ள 54 நாடுகளுக்கு பெயரளவில் தலைவராகவும் இங்கிலாந்து, கனடா, ஆஸ்திரேலியா, ஜமைக்கா, சாலொமோன் தீவுகள், நியூசிலாந்து உட்பட 34 நாடுகளுக்கு அங்கீகரிக்கப்பட்ட தலைமையாகவும் இருந்துள்ளார் எலிசபெத்.

தனது ஆட்சிக் காலத்தில் 15 இங்கிலாந்து பிரதமர்கள் மற்றும் 14 அமெரிக்க அதிபர்களை கண்டவர் எலிசபெத். 

இரண்டாம் எலிசபெத்தின் ஆட்சியின் போது இங்கிலாந்தின் பிரதமராக இருந்த வின்ஸ்டன் சர்ச்சில், எலிசபெத் சிறுவயதில் இருந்தே ஆழமான சிந்தனையையும் அதிகாரத்தையும் வெளிப்படுத்தியதாக பகிர்ந்துள்ளார்.

இங்கிலாந்தின் ஆளும் பிரதமர்களுடன், ஆட்சி பொறுப்பில் இருக்கும் அரசி வாரந்தோறும் சந்தித்து முக்கிய முடிவுகளை பற்றி கலந்துரையாட வேண்டும் என்ற மரபை தவறாமல் கடைபிடித்தவர் எலிசபெத்.

நவீன வளர்ச்சியிலும் தொழிநுட்பத்திலும் ஆர்வம் கொண்ட எலிசபெத் தன்னுடைய பதவியேற்பை ஒளிபரப்பு செய்த முதல் அரசி ஆவார்.

மாறிவரும் உலக சூழலில், அரசியாக தனது பங்கு குறைவு என்றாலும் மக்கள் தொடர்பிலும் பல்வேறு தொண்டு சேவைகளிலும் தன்னையும் அரச குடும்பத்தையும் இணைத்து, ஈடுபடுத்தி இங்கிலாந்தில் மட்டுமில்லாது பல நாடுகளின் தவிர்க்க முடியாத அங்கமானார் எலிசபெத்.

இயல்பான நகைச்சுவை உணர்வு கொண்ட எலிசபெத் குதிரை பந்தயத்தில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். தனது மூன்றாம் வயதிலேயே எலிசபெத் குதிரை ஒட்டியதாக கூறப்படுகிறது. நான்கு குழந்தைகள், எட்டு பேரக்குழந்தைகள் மற்றும் பன்னிரண்டு கொள்ளு பேரப்பிள்ளைகளை உடைய எலிசபத்தின் கணவர் இளவரசர் பிலிப் கடந்த வருடம் ஏப்ரல் மாதம் மறைந்தார்.

கணவரின் இறப்புக்கு பிறகே தனது அலுவல்களை வெகுவாக குறைத்து  கொண்டாலும் ஜூன் மாதம் நடைபெற்ற பிளாட்டினம் ஜுப்லியில் கலந்து கொண்டார். அதன் பின், அவ்வப்போது உடல்நலக்குறைவுக்காக சிகிச்சை பெற்று வந்த எலிசபெத், தனது 96வது வயதில் காலனமானார்.

எலிசபெத்தின் மறைவுக்கு உலக தலைவர்கள் பலரும் தங்கள் இரங்கல்களை பதிவு செய்து வரும் நிலையில், தங்கள் அரசியை இழந்த இங்கிலாந்து மக்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.