Saturday, January 17, 2026

₹12,50,000 கோடி கேட்டு அவதூறு வழக்கு! -நியூயார்க் டைம்ஸ்-க்கு விழுந்த இடி! விஸ்வரூபம் எடுத்த டிரம்ப்!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், உலகின் புகழ்பெற்ற பத்திரிகைகளில் ஒன்றான தி நியூயார்க் டைம்ஸ் மீது 15 பில்லியன் டாலர், அதாவது இந்திய மதிப்பில் சுமார் 12 லட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபாய்க்கு அவதூறு வழக்குத் தொடர்ந்து உலகையே அதிர வைத்துள்ளார். இந்த வழக்குப் பற்றிய முழு விவரங்களையும் பார்க்கலாம்.

“நமது நாட்டின் வரலாற்றிலேயே மிகவும் சீரழிந்த செய்தித்தாள்களில் ஒன்றான நியூயார்க் டைம்ஸ் மீது 15 பில்லியன் டாலர் அவதூறு வழக்குத் தொடுப்பதில் நான் பெருமைப்படுகிறேன்” என்று அதிபர் டிரம்ப் தனது ‘X’ சமூக வலைதளப் பக்கத்தில் ஆவேசமாகப் பதிவிட்டுள்ளார். அந்தப் பத்திரிகையை, “தீவிர இடதுசாரி ஜனநாயகக் கட்சியின் ஊதுகுழல்” என்றும் அவர் கடுமையாகச் சாடியுள்ளார்.

இந்த வழக்குக்கான காரணமாக டிரம்ப் கூறுவது என்னவென்றால், நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை பல தசாப்தங்களாக தன்னைப் பற்றியும், தனது குடும்பம், தனது வணிகம், மற்றும் தனது MAGA இயக்கம் குறித்தும் தொடர்ந்து பொய்களைப் பரப்பி வருகிறது என்பதே. மேலும், நியூயார்க் டைம்ஸின் செயல்பாடுகள், தனக்கு எதிரான “வரலாற்றிலேயே மிகப்பெரிய சட்டவிரோத பிரச்சார பங்களிப்பு” என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார். கமலா ஹாரிஸுக்கு அவர்கள் அளித்த ஆதரவு, பத்திரிகையின் முதல் பக்கத்தில் மறைமுகமாக வைக்கப்பட்டிருந்தது இதற்கு ஒரு உதாரணம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது மட்டுமல்லாமல், நியூயார்க் டைம்ஸ், ஏபிசி மற்றும் சிபிஎஸ் போன்ற மற்ற ஊடகங்களுடன் சேர்ந்து கொண்டு, தன்னைப்பற்றி தவறான செய்திகளைப் பரப்புவதை ஒரு நீண்டகால நோக்கமாகக் கொண்டுள்ளது என்றும், இது சட்டவிரோதமானது மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் டிரம்ப் கூறியுள்ளார்.

“இதற்கு முன்பும் நாங்கள் போலிச் செய்தி நெட்வொர்க்குகளுக்கு எதிராக வெற்றிகரமாக வழக்குத் தொடர்ந்துள்ளோம்” என்று குறிப்பிட்டுள்ள டிரம்ப், ஏபிசி/டிஸ்னி மற்றும் சிபிஎஸ்/பாரமவுண்ட் போன்ற நிறுவனங்கள், அதிநவீன ஆவணங்கள் மற்றும் காட்சிகளை மாற்றி அமைத்து தன் மீது பொய்யான பழிகளைச் சுமத்தியதாகவும், அதற்காக சாதனை அளவிலான தொகையை செட்டில்மெண்ட்டாகப் பெற்றதாகவும் அவர் நினைவு கூர்ந்துள்ளார்.

“நியூயார்க் டைம்ஸ் நீண்ட காலமாக என்னைப் பற்றி சுதந்திரமாகப் பொய் சொல்லவும், அவதூறு செய்யவும் அனுமதிக்கப்பட்டது, ஆனால் அது இப்போது நிறுத்தப்பட்டுள்ளது!” என்று கூறியுள்ள டிரம்ப், இந்த வழக்கு புளோரிடா மாகாணத்தில் தொடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். டிரம்பின் இந்த அதிரடி நடவடிக்கை, அமெரிக்க ஊடக உலகில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.

Related News

Latest News