ரஷ்யாவுக்காக களமிறங்கிய ‘கிம்’? உக்ரைனைச் சிதைத்த வடகொரிய ‘ஏவுகணை’!

உக்ரைன் போரில் ஒரு புதிய மற்றும் மிகக் கொடூரமான தாக்குதல் அரங்கேறியுள்ளது. ரஷ்யா ஒரே இரவில் உக்ரைன் முழுவதும் நடத்திய ஏவுகணைத் தாக்குதல்களில் குறைந்தது 10 பேர் கொல்லப்பட்டுள்ளனர், மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர்.

இந்தத் தாக்குதலில் ரஷ்யா, வடகொரியா வழங்கிய பாலிஸ்டிக் ஏவுகணைகளைப் பயன்படுத்தியுள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

வடகொரியாவிலிருந்து ரஷ்யாவிற்குப் புதிய ஏவுகணைகள் மற்றும் 50,000-க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் அனுப்பப்பட உள்ளதாகத் தான் ஏற்கனவே விடுத்த எச்சரிக்கையை இந்தச் சம்பவம் மெய்ப்பித்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

ரஷ்யாவின் இந்த மின்னல் வேகத் தாக்குதலில் உக்ரைனின் ஜாபோரிஜியா (Zaporizhzhia) நகரம் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள ஒரு இரும்பு ஆலை ஊழியர்கள் பாதுகாப்பு இடத்திற்குச் செல்ல முயன்றபோது, வடகொரியாவின் பாலிஸ்டிக் ஏவுகணைகள் அவர்கள் மீது விழுந்ததில் 7 பேர் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர்.

மேலும், உக்ரைன் தலைநகர் கீவ்வில் உள்ள குழந்தைகள் மருத்துவமனை மற்றும் தொற்றுநோய் மருத்துவமனைகளைக் குறிவைத்தும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அதிர்ஷ்டவசமாக மருத்துவமனை ஊழியர்களும் குழந்தைகளும் நிலத்தடிப் பாதுகாப்பகத்தில் இருந்ததால் உயிர் தப்பினர்.

உக்ரைனின் சிவிலியன் கட்டமைப்புகளைச் சிதைப்பதே ரஷ்யாவின் இந்தத் தாக்குதலின் நோக்கம் என உக்ரைன் தரப்பு சாடியுள்ளது.

ரஷ்யா மற்றும் வடகொரியா இடையே கையெழுத்தான பாதுகாப்பு ஒப்பந்தத்திற்குப் பிறகு, வடகொரியா தனது பீரங்கி குண்டுகள் மற்றும் ஏவுகணைகளை ரஷ்யாவிற்கு வாரி வழங்கி வருகிறது. தற்போது ரஷ்யாவிற்கு அதிகப்படியான ஆட்கள் தேவைப்படுவதால், வடகொரியா தனது வீரர்களையும் அனுப்பத் துணிந்துள்ளது.

இதுகுறித்து தென்கொரியா தனது ஆழ்ந்த கவலையைத் தெரிவித்துள்ளதுடன், ஐநா பாதுகாப்பு சபையின் தீர்மானங்களை மீறி நடக்கும் இந்த ராணுவக் கூட்டுறவு தங்களின் பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தல் என்று கூறியுள்ளது. ரஷ்யாவின் இந்தப் புதிய ஏவுகணைகளைத் தடுத்து நிறுத்த உக்ரைனிடம் போதிய வான் பாதுகாப்பு வசதிகள் (Patriot Systems) இல்லாதது ஒரு மிகப்பெரிய பலவீனமாக மாறியுள்ளது.

கடந்த 2022-ல் போர் தொடங்கிய முதல் சில மாதங்களுக்குப் பிறகு, இப்போதுதான் உக்ரைனில் பொதுமக்கள் உயிரிழப்பு மீண்டும் முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிகரித்துள்ளதாக ஐநா சபை தெரிவித்துள்ளது.

ரஷ்யாவின் எண்ணெய் ஆலைகள் மற்றும் வணிகத் தளங்கள் மீது உக்ரைன் ட்ரோன் தாக்குதல்களை நடத்தி வரும் நிலையில், அதற்குப் பதிலடியாக ரஷ்யா தனது ஆக்ரோஷத்தை அதிகரித்துள்ளது.

வல்லரசு நாடுகளின் இந்த மோதலில் வடகொரியாவின் நேரடித் தலையீடு, இந்தப் போரை ஒரு புதிய உலகளாவிய ஆபத்தை நோக்கித் தள்ளி வருகிறதோ என்ற அச்சத்தை உலக நாடுகளிடையே ஏற்படுத்தியுள்ளது.

Related News

Latest News