கடந்த ஜூன் மாத தொடக்கத்தில் இருந்து தங்கத்தின் விலை ஏற்ற-இறக்கங்களுடன் காணப்பட்ட நிலையில், சில நாட்கள் தொடர்ந்து சரிவையும் சந்தித்தது.
ஆனால் ஜூன் 30-ஆம் தேதி முதல் நிலைமை மாறி, ஒரே நாளில் இருமுறை விலை மாற்றம் ஏற்படும் போக்கு தொடர்கிறது. அதன் தொடர்ச்சியாக நேற்றும் தங்கத்தின் விலை காலை மற்றும் மாலை என இரு கட்டங்களாக உயர்ந்தது. நேற்று முன்தினம் ஒரு கிராம் தங்கம் ரூ.13,250-க்கும், ஒரு சவரன் ரூ.1,06,000-க்கும் விற்பனையானது.
நேற்று காலை கிராமுக்கு ரூ.150 மற்றும் சவரனுக்கு ரூ.1,200 உயர்ந்த நிலையில், மாலையிலும் அதே அளவுக்கு மீண்டும் விலை அதிகரித்தது. இதன் மூலம் ஒரே நாளில் ஒரு கிராமுக்கு ரூ.300 மற்றும் ஒரு சவரனுக்கு ரூ.2,400 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.13,550-க்கும், ஒரு சவரன் ரூ.1,08,400-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்த உயர்வு இன்று மேலும் நீடித்துள்ளது. சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு மேலும் ரூ.1,200 உயர்ந்து ரூ.1,09,600-ஆக உள்ளது. அதேபோல், ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.150 உயர்ந்து ரூ.13,700-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கத்தைப் போலவே வெள்ளியின் விலையும் உயர்வை பதிவு செய்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.5 உயர்ந்து ரூ.260-க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.2,60,000-க்கும் விற்பனையாகிறது. தொடர்ந்து அதிகரித்து வரும் தங்கம் மற்றும் வெள்ளி விலை, நகை வாங்க திட்டமிட்டுள்ள பொதுமக்களுக்கும் முதலீட்டாளர்களுக்கும் கூடுதல் செலவையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.
