இந்தியாவில் மீண்டும் லாக்டவுன் போன்ற கட்டுப்பாடுகள் வரப்போகிறதா என்ற அச்சம் இப்போது மக்கள் மத்தியில் வேகமாகப் பரவி வருகிறது. உலகளவில் அதிகரித்து வரும் கச்சா எண்ணெய் விலை மற்றும் கிழக்கு ஆசியாவில் நிலவும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், மத்திய அரசு இப்போது மிக முக்கியமான “செலவு கட்டுப்பாட்டு” உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது.
குறிப்பாகப் பெட்ரோல், டீசல் மற்றும் சிஎன்ஜி விலைகள் தொடர்ந்து உயர்ந்து வருவதைக் கருத்தில் கொண்டு, மத்திய நிதி அமைச்சகத்தின் நிதிச் சேவைகள் துறை ஒரு புதிய அரசாணையை வெளியிட்டுள்ளது. இந்த உத்தரவு எஸ்பிஐ, பேங்க் ஆஃப் பரோடா போன்ற பொதுத்துறை வங்கிகள் மற்றும் எல்ஐசி போன்ற இன்சூரன்ஸ் நிறுவனங்களுக்குக் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
இந்தப் புதிய உத்தரவின்படி, அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் உயர் அதிகாரிகள் தங்களது தேவையற்ற வெளிநாட்டுப் பயணங்களை உடனடியாகக் குறைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. அனைத்து முக்கியமான ஆலோசனைக் கூட்டங்களையும் இனி நேரில் நடத்தாமல், வீடியோ கான்பரன்ஸ் மூலமாகவே நடத்த வேண்டும் என்றும், தேவையற்ற ஆடம்பரச் செலவுகளை முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
ஹார்முஸ் கடல்சந்தி பகுதியில் ஏற்பட்டுள்ள போர் பதற்றங்கள் காரணமாக எண்ணெய் இறக்குமதி பாதிக்கப்படலாம் என்பதால், நாட்டின் அந்நியச் செலாவணி இருப்பைப் பாதுகாக்க இத்தகைய ‘அவசரக்கால’ சிக்கன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகப் பொருளாதார நிபுணர்கள் கருதுகின்றனர்.
இதுமட்டுமல்லாமல், பிரதமர் நரேந்திர மோடியும் சமீபத்தில் நாட்டு மக்களிடம் ஒரு உருக்கமான வேண்டுகோளை விடுத்துள்ளார். எரிபொருளை மிகச் சிக்கனமாகப் பயன்படுத்துங்கள் என்றும், மெட்ரோ நகரங்களில் வசிப்பவர்கள் முடிந்தவரைப் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும், வெளிநாட்டுப் பொருட்களைத் தவிர்த்து இந்தியாவில் தயாரிக்கப்படும் பொருட்களை வாங்குவதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்திற்கு வலு சேர்க்குமாறு அவர் வலியுறுத்தியுள்ளார். இத்தகைய அதிரடி கட்டுப்பாடுகள் ஒருபுறம் இருக்க, சமூக வலைதளங்களில் “மீண்டும் வீட்டில் இருந்து வேலை” (Work From Home) செய்யும் காலம் வந்துவிட்டதா என்ற விவாதங்கள் அனல் பறக்கின்றன.
அதிகாரப்பூர்வமாக லாக்டவுன் குறித்து எந்த அறிவிப்பும் இல்லை என்றாலும், மத்திய அரசின் இந்தத் தீவிரமான சிக்கன நடவடிக்கைகள் ஏதோ ஒரு பெரிய பொருளாதார நெருக்கடிக்கு இந்தியா தயாராகி வருவதையே காட்டுகிறது. குறிப்பாகப் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வால் சாமானிய மக்கள் ஏற்கனவே விழிபிதுங்கி இருக்கும் சூழலில், மத்திய அரசின் இத்தகைய கட்டுப்பாடுகள் நடுத்தர மக்களுக்கு மேலும் சுமையை ஏற்படுத்துமா என்ற கவலை எழுந்துள்ளது.
தமிழகத்தில் புதிய ஆட்சி அமைந்துள்ள நிலையில், மத்திய அரசின் இந்த புதிய ரூல்ஸ் மாநிலத்தின் வளர்ச்சித் திட்டங்களை எப்படிப் பாதிக்கும் என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
