நரைமுடி வருவதற்கான காரணங்களைப் பார்க்கும்போது, இன்றைய வேகமான வாழ்க்கை முறையில் 20 முதல் 30 வயதுக்குள்ளேயே பலருக்கும் முடி நரைக்கத் தொடங்குகிறது. இதற்கு வயது மட்டுமே காரணம் அல்ல. சுற்றுச்சூழல் மாசுபாடு மற்றும் உடலில் சேரும் நச்சுகள் மெலனின் செல்களை பாதிக்கின்றன.
ஒரு நரைமுடியை பிடுங்கினால், அதைச் சுற்றியுள்ள மற்ற முடிகளுக்கும் நரை பரவும் என்ற கருத்து அறிவியல் ரீதியாக தவறானது. மனிதரின் தலையில் உள்ள ஒவ்வொரு முடியின் நிறமும், அந்தந்த முடியின் வேர்க்கால்களில் (Hair Follicles) உள்ள மெலனின் அளவைப் பொறுத்தே அமைகிறது.
ஒரு முடியை மட்டும் பிடுங்குவதால், அதன் அருகில் உள்ள முடிகளின் மெலனின் அளவில் எந்த மாற்றமும் ஏற்படாது. நரைமுடியை பறித்தால், அந்த வேரிலிருந்து மீண்டும் ஒரு நரைமுடியே வளருமே தவிர, அருகிலுள்ள முடிகளை நரையாக மாற்றாது.
மாறாக, தலைமுடியை அடிக்கடி பிடுங்குவது வேர்க்கால்களுக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும். முடியின் அடிப்பகுதியில் காயம் ஏற்பட்டு, அந்த இடத்தில் நிரந்தரமாக முடி வளராமல் போகும் அபாயமும் உள்ளது. மேலும், முடியை பிடுங்கும் போது ஏற்படும் சிறிய காயங்கள் தலையில் பாக்டீரியா தொற்று மற்றும் வீக்கத்தை உருவாக்கக்கூடும். அந்த இடத்தில் மீண்டும் வளரும் முடி, முன்பை விட கடினமாகவும் ஒழுங்கற்ற முறையிலும் வளர வாய்ப்புள்ளது.
இயற்கை முறையில் நரைமுடியைத் தடுக்க, முதலில் மனஅழுத்தத்தை குறைப்பது அவசியம். அதிகமான கவலை மற்றும் மனஅழுத்தம் உடலில் உள்ள ஸ்டெம் செல்களை பாதித்து, மெலனின் உற்பத்தியை குறைத்து முடியை நரைக்கச் செய்கிறது.
மனஅழுத்தத்தை குறைக்க ஆழ்ந்த, தரமான தூக்கம் மிகவும் முக்கியமானதாகும். இதனுடன், தினசரி யோகா, தியானம் போன்ற மனஅழுத்தம் குறைக்கும் செயல்பாடுகளில் ஈடுபடுவதும் நரைமுடி வருவதை தாமதப்படுத்த உதவும்.
