கடந்த ஆண்டு தொடக்கம் முதலே தங்கம் மற்றும் வெள்ளி விலை தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் இருந்து வந்தன. குறிப்பாக கடந்த சில நாட்களில், இந்த இரு மதிப்புமிக்க உலோகங்களின் விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டிய நிலையில், கடந்த 2 நாட்களாக விலை சரிவைக் கண்டுள்ளது. இதனால், அதிக விலை காரணமாக கவலையில் இருந்த நடுத்தர மக்களுக்கு சிறிதளவு நிம்மதி ஏற்பட்டுள்ளது.
இன்றைய விலை நிலவரம் சற்று உயர்ந்துள்ளது என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். இந்நிலையில், 2026 புத்தாண்டை முன்னிட்டு தங்கம் மற்றும் வெள்ளி விலைகளின் எதிர்கால நிலவரம் குறித்து நிபுணர்கள் தங்களது கணிப்புகளை வெளியிட்டுள்ளனர்.
நகை பிரியர்களுக்கு நிபுணர்கள் ஒரு நம்பிக்கையூட்டும் தகவலை கூறியுள்ளனர். அதாவது, தங்கம் மற்றும் வெள்ளி எவ்வளவு வேகமாக உயர்ந்துள்ளதோ, அதே வேகத்தில் விலை சரிவும் ஏற்படலாம். ஒரே நாளில் கூட 10 முதல் 20 சதவீதம் வரை பெரிய அளவில் விலை குறைய வாய்ப்புள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.
சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை அவுன்ஸ் ஒன்றுக்கு சுமார் 4,500 டாலரை எட்டியுள்ளது. இந்தியாவிலும் தங்கம் வரலாறு காணாத உச்சத்தில் வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது. அதே நேரத்தில், உள்நாட்டு சந்தையில் ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.2.50 லட்சத்தை தாண்டி புதிய சாதனை படைத்துள்ளது. இது முதலீட்டாளர்களுக்கு சாதகமாக இருந்தாலும், பொதுமக்களுக்கு கவலையளிக்கும் விஷயமாகவே உள்ளது.
பொருட்கள் சந்தை நிபுணர்கள் கூறுவதாவது, தற்போது சந்தையில் வாங்கல்–விற்பனை குறைந்துள்ளதால் விலை எளிதில் உயர்ந்து வருகின்றது. குறிப்பாக வெள்ளி, குறுகிய காலத்தில் 30 சதவீதம் வரை உயர்ந்தது கவலைக்குரியதாக பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக, வரும் நாட்களில் தங்கம் ரூ.10,000 முதல் ரூ.15,000 வரை குறையவும், வெள்ளி 10 முதல் 20 சதவீதம் வரை சரிவைக் காணவும் வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கணிக்கின்றனர்.
இது நிபுணர்களின் கணிப்பு மட்டுமே. பொதுமக்கள் இதை தங்கத்துக்குக்கான முதலீட்டு ஆலோசனையாகவோ தங்கம் வாங்க திட்டமிடுபவர்களுக்கான அறிவுரையாகவோ எடுத்துக்கொள்ள வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
