தங்கம் மற்றும் வெள்ளிக்கு அடுத்ததாக, முதலீட்டாளர்களின் கவனத்தை இப்போது அதிகமாக ஈர்க்கும் உலோகமாக தாமிரம் (செம்பு) மாறி வருகிறது. சமீப காலமாக உலக சந்தையில் தாமிரத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், பல முதலீட்டாளர்கள் இதனை “அடுத்த தங்கம்” என்று அழைக்கத் தொடங்கியுள்ளனர்.
லண்டன் மெட்டல் எக்ஸ்சேஞ்சில் கடந்த வாரம் தாமிரத்தின் விலை ஒரு டன்னுக்கு சுமார் 13,000 அமெரிக்க டாலரை எட்டியது. 2026 ஆம் ஆண்டிலும் தாமிர விநியோகக் குறைவும், தேவையின் அதிகரிப்பும் தொடரும் என்பதால், இதன் முக்கியத்துவம் இன்னும் அதிகரிக்கும் என சந்தை வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
செயற்கை நுண்ணறிவு (AI), மின்சார வாகனங்கள், டேட்டா சென்டர்கள் மற்றும் பசுமை பொருளாதாரம் போன்ற துறைகளில் தாமிரத்தின் பயன்பாடு வேகமாக அதிகரித்து வருகிறது. இதற்கு கூடுதலாக, மின்சாரம், கட்டுமானம் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் துறைகளிலும் இந்த சிவப்பு உலோகம் முக்கிய பங்கு வகிக்கிறது. இதன் காரணமாக, கடந்த 15 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தாமிரத்தின் விலை உயர்ந்து வருகிறது. இந்த ஆண்டில் மட்டும் தாமிரத்தின் விலை 40 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.
வலுவான தேவை மற்றும் சமீபத்திய விநியோகத் தடைகள் காரணமாக, 2025 டிசம்பர் காலாண்டில் தாமிரத்தின் விலை உச்சத்தை எட்டியதாக பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.
நிபுணர்களின் கணிப்புப்படி, 2026 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் தாமிரத்தின் விலை ஒரு டன்னுக்கு 12,500 அமெரிக்க டாலரை எட்டக்கூடும். இந்த சூழ்நிலையில், தாமிரம் முதலீட்டாளர்களுக்கு ஒரு முக்கிய முதலீட்டு வாய்ப்பாக மாறி வருகிறது.
