இந்திய மக்களின் அடையாள ஆவணமாகும் ஆதார் கார்டு, வங்கி பரிவர்த்தனைகள் முதல் பல்வேறு சேவைகளுக்கு அவசியமான ஆவணமாக இருந்து வருகிறது. மேலும் ஹோட்டல்கள், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மற்றும் பல நிறுவனங்கள் ஆதார் அட்டையின் புகைப்பட நகல்களை சேமித்து கொள்ளும் பழக்கம் உள்ளது.
தற்போதைய ஆதார் சட்டப்படி, ஆதார் நகல்களை வைத்திருப்பதே சட்டவிரோதம் என்றும், இது மிகப்பெரிய பாதுகாப்பு பிரச்னை என கூறப்படுகிறது. ஆதார் அட்டைகளின் நகல்களை சேகரித்து சேமித்து வைப்பதைத் தடுக்கும் நோக்கில் ஒரு புதிய விதியை UIDAI கொண்டு வர உள்ளது.
இதுகுறித்து UIDAI தலைமை நிர்வாக அதிகாரி புவனேஷ் குமார் கூறுகையில் , ஆதார் அடிப்படையிலான சரிபார்ப்பை நடத்தும் ஹோட்டல்கள் மற்றும் சில நிறுவனங்கள் டிஜிட்டல் முறையில் சரிபார்ப்பை மேற்கொள்ள வேண்டும். QR குறியீடு, ஸ்கேனிங் மூலமாகவோ அல்லது தற்போது உருவாக்கத்தில் உள்ள புதிய ஆதார் செயலி மூலமாகவோ சரிபார்ப்பை கொண்டு வர வேண்டும்.
இதன் மூலம், தற்போது காகிதத்தில் ஆதார் ஆவணங்களை கையாளும்போது ஏற்படும் பாதுகாப்பு அபாயங்கள் குறையும். இதற்கு ஆஃப்லைன் சரிபார்ப்பு தேவையானவர்கள், தங்கள் சொந்த மென்பொருளுடன் ஒருங்கிணைக்கக் கூடிய API வழங்கப்படும். இதன் மூலம் அவர்கள் தங்கள் கணினி அல்லது மென்பொருளில் இந்த சரிபார்ப்பு வசதியை எளிதில் சேர்க்க முடியும். மேலும், செயலி-மூலம்-செயலி (App-to-App) சரிபார்ப்பும் புதிய மொபைல் செயலி மூலம் சோதனை நிலையில் உள்ளது.
