நடுநடுங்க வைத்த தங்கம் விலை! ஆண்டு முடிவு என்பதால் ‘இது’ நடக்க வாய்ப்பு?

தீபாவளி முடிந்து சில நாட்கள் தொடர்ந்து தங்கம் விலை குறைந்து வந்தது. இதனால் நகை விரும்பிகள் சற்று மகிழ்ச்சியடைந்திருந்தனர். ஆனால் அந்த நிலை நீடிக்காமல் இன்று தங்கம் அதிரடியாக உயர்ந்து, மீண்டும் சந்தையில் “என்ன நடக்கும்?” என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. தங்கத்தின் விலை ஏற்கனவே சவரனுக்கு ஒரு லட்சம் ரூபாய்யை எட்டும் என்ற கணிப்பு உள்ள நிலையில் பொதுமக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

நவம்பர் 20ம் தேதி ஒரு கிராம் 11,500 ரூபாயாகவும் சவரன் ரூ.92,000-க்கும் விற்பனை செய்யப்பட்ட தங்கம், நவம்பர் 21 அன்று கிராமுக்கு ரூ.40 குறைந்து ரூ.11,460 மற்றும் சவரனுக்கு ரூ.320 குறைந்து ரூ.91,680-க்கு வந்தது. இதனால் “தங்கம் விலை மீண்டும் சரிவா?” என்ற நம்பிக்கை ஒளி லேசாக தோன்றியது.

ஆனால் அதற்குப் பிறகு ஒரே நாளில் சூழல் மாறி இன்று அதாவது நவம்பர் 22ம் தேதி தங்கம் ரூ.1,360 உயர்ந்து சவரனுக்கு ரூ.93,040-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராம் ரூ.11,630-க்கு உயர்ந்தது. இது மீண்டும் தங்க சந்தையை பரபரப்பாக்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.

சேமிப்பு மற்றும் பாதுகாப்பின் அடையாளமான தங்கம், உலக சந்தை நிலவரம், டாலர் மாற்று விகிதம், பணவீக்கம், மத்திய வங்கி கொள்கைகள் போன்ற சில கார‌ணங்களால் இவ்வாறு திடீர் உயர்வைச் சந்தித்ததாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

தங்கம் மட்டுமல்ல, வெள்ளியும் இன்று உயர்வு கண்டுள்ளது. இதனால் முதலீட்டாளர்கள் “அடுத்த அலை மேலும் உயருமா?” என்ற எதிர்பார்ப்பில் மிதக்கின்றனர். ஒரே நாளில் விலை இப்படியாக பாய்ந்ததால், நடுத்தர மக்கள் தங்கம் வாங்குவது உண்மையிலேயே சவாலாக மாறி வருகிறது. தங்கம் விலை மேலும் உயர்ந்தால், திருமணம், விழா, முதலீடு என எந்த நோக்கத்துக்கும் தங்கம் வாங்குவது பல குடும்பங்களுக்கு கனவாக மாறும் அபாயம் உள்ளது.

வருட முடிவில் அதாவது டிசம்பர் மாதத்தில் சர்வதேச சந்தையில் லாபப் பதிவு முக்கியமாக இருக்கும். எனவே பெரிய முதலீட்டாளர்கள் ஆண்டுக் கணக்கை முடிக்கும் நேரத்தில் லாபத்தைப் பதிவு செய்வதால் தங்கம் விலை  மெதுவாகக் குறையலாம். என்றாலும் அது உலக சந்தை, டாலர் விகிதம், மத்திய வங்கி கொள்கை போன்ற காரணிகளின் மீது முழுவதும் சார்ந்திருக்கிறது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

Related News

Latest News