டெல்லியில் வெடித்த காருடன் தொடர்பு இருந்ததாக சந்தேகிக்கப்படும் மற்றொரு கார், ஃபரிதாபாத் அருகே பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கடந்த திங்கட்கிழமை மாலை டெல்லி செங்கோட்டை அருகே கார் ஒன்று வெடித்து சிதறியது. இது ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பின் தற்கொலை தாக்குதல் என புலனாய்வாளர்கள் கருதுகின்றனர். இதைத் தொடர்ந்து சுமார் 200-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகள் ஆய்வு செய்யப்படுகின்றன. அந்தக் காட்சிகளில், வெடித்த ஹூண்டாய் ஐ20 காருடன் சிவப்பு நிற ‘ஈகோ ஸ்போர்ட்’ கார் சுற்றிவந்தது பதிவாகியுள்ளது. அதில் டெல்லி பதிவு எண் இருப்பதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இரு கார்கள் தாக்குதல் நாளில் நண்பகலில் செங்கோட்டை அருகே நிறுத்தப்பட்டிருந்ததாகவும் தெரியவந்துள்ளது. இதனால், அந்த சிவப்பு கார் தீவிரவாதிகளுடன் தொடர்புடையதா என சந்தேகம் எழுந்தது. பின்னர், பரிதாபாத் அருகே கண்டவலி கிராமத்தில் யாரும் இல்லாமல் இருந்த அந்த சிவப்பு கார் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டது.
வெடித்த காரில் இருந்த டாக்டர் உமர் முகமது வசித்த கிராமத்திலும் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அவரது பெற்றோர்கள் மற்றும் இரு சகோதரர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். உமரின் பெற்றோர், ‘மணமுடிக்க இருந்த மகன் திடீரென இத்தகைய செயலுக்கு சென்றது நம்ப முடியவில்லை’ என தெரிவித்துள்ளனர். மணமுடிய இருந்த பெண்ணும் மருத்துவராக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
காஷ்மீரைச் சேர்ந்த உமர், யூபிஎஸ்சி தேர்வுக்குத் தயாராகி வந்தவர் என்றும், கடைசியாக நவம்பர் 8-ம் தேதி குடும்பத்தாருடன் பேசினார் என்றும் கூறப்படுகிறது. அதற்கு பிறகு அவரது மொபைல் Switch off செய்யப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.
உமர் மற்றும் நண்பர் முஜம்மில் பணியாற்றிய ஃபரிதாபாத் அல்-பலா மருத்துவக் கல்லூரியில், என்ஐஏ மற்றும் சிறப்பு படையினர் சுமார் 2.5 மணி நேரம் சோதனை நடத்தியுள்ளனர். அதில் சில முக்கிய தடயங்கள் கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
