சீனாவின் ஷென்சென் நகரைச் சேர்ந்த லோன்வி பயோசயன்சஸ் (Lonvi Biosciences) நிறுவனம், திராட்சை விதைச் சத்து அடிப்படையாக கொண்ட புதிய மாத்திரையை வெளியிட்டுள்ளது. இந்த capsule மாத்திரை, மனிதர்களின் ஆயுளை 150 ஆண்டுகள் வரை நீட்டிக்க உதவலாம் என அந்நிறுவனம் கூறுகிறது.
அறிமுகப்படுத்தப்பட்ட அந்த மருந்துப் பொருளை ஆய்வக எலிகளில் சோதித்ததில், அவை சராசரியாக 9.4% அதிக காலம் வாழ்ந்துள்ளன. மட்டுமல்லாமல், சிகிச்சை தொடங்கிய முதல் நாளிலிருந்து கணக்கிட்டால், சில எலிகள் 64.2% அதிக ஆயுள் பெற்றுள்ளதாக ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
இந்த மாத்திரை, Zombie Cells எனப்படும் வயதான செல்களை அழிக்க உதவுவதாகவும் இதன் மூலம், ஆரோக்கியமான திசுக்கள் பாதுகாக்கப்படுகின்றன என கூறப்படுகிறது. ஆரோக்கியமான வாழ்க்கை முறை மற்றும் முறையான மருத்துவ பராமரிப்புடன் இந்தக் capsule-களை பயன்படுத்தினால், மனிதர்கள் 100 வயதை கடந்து, கூடுமானால் 120 வயது வரை வாழ முடியும் என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
சீன அரசு, செயற்கை நுண்ணறிவு மற்றும் உயிரியல் தொழில்நுட்பத்துடன் இணைந்து, ஆயுள் நீட்டிப்பு ஆராய்ச்சியை தேசிய முன்னுரிமையாக அறிவித்துள்ளது. இதன் மூலம், நீண்ட ஆயுளுக்கு மனித உடலின் செயல்பாடுகள் பாதுகாக்கப்படுவதாகவும், வாழ்க்கை தரம் மேம்படுவதாகவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த மாத்திரை பொதுமக்கள் விரைவில் அணுகக்கூடியதாக இருக்கும் என்றும் மேலும், ஆயுள் நீட்டிப்புக்கு சாத்தியமான புதிய மருந்துகளின் பரிசோதனையில் இதை முக்கிய முன்னேற்றமாக கருதுவதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
