மராட்டிய மாநிலம் புனேவில் உள்ள சிவானா நகரை சேர்ந்தவர் சமீர் ஜாதவ். இவரது மனைவி அஞ்சலி (வயது38) தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். இவர்களுக்கு 2 குழநதைகள் உள்ளனர்.
கடந்த மாதம் 26-ந்தேதி சமீர் ஜாதவ், தனது மனைவி அஞ்சலியை மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றுள்ளார். குறிப்பிட்ட இடத்திற்கு சென்றதும் மனைவியை கழுத்தை நெரித்து கொன்ற சமீர் ஜாதவ் அங்குள்ள இரும்பு உலையில் அஞ்சலியின் உடலை எரித்துள்ளார். பின்னர் சாம்பலை அருகே இருந்த ஆற்றில் கரைத்துள்ளார்.
பின்னர் சமீர் ஜாதவ் காவல் நிலையத்திற்கு சென்று தனது மனைவி காணாமல்போய்விட்டதாக புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். போலீசாருக்கு தன் மீது சந்தேகம் வந்துவிடக்கூடாது என்பதற்காக சமீர் ஜாதவ் அடிக்கடி காவல் நிலையத்திற்கு சென்று எனது மனைவியை எப்போது கண்டுபிடித்து தருவீர்கள் என கேள்வி எழுப்பி வந்துள்ளார்.
அவரது நடவடிக்கைகள் போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. அவரை கண்காணித்த போலீசார் சமீரை பிடித்து தங்களது பாணியில் கவனித்து விசாரித்தனர். அப்போது அவர் தனது மனைவி அஞ்சலியை கொன்று எரித்ததை ஒப்புக்கொண்டார். தொடர்ந்து அவரிடம் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன.
அவரிடம் நடத்திய விசாரணையில் சமீர் ஜாதவுக்கு வேறொரு பெண்ணுடன் கள்ளத் தொடர்பு இருந்ததும், இது தொடர்பான தகராறில் அவர் திட்டம் தீட்டி தனது மனைவியை கொலை செய்ததும் தெரியவந்தது. அஜய் தேவ்கான் நடிப்பில் வெளிவந்த த்ரிஷ்யம் படத்தை 4 முறை பார்த்ததாகவும், அதே பாணியில் மனைவியை கொன்று நாடகமாடியதாகவும் அவர் கூறினார்.
