குவியும் முதலீடு., இனி வெள்ளிதான் எல்லாமே., விற்றுத் தீர்ந்த வெள்ளி கட்டிகள்!

இந்தியாவில் கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. தங்கத்தின் விலையை தொடர்ந்து வெள்ளி விலையும் அதன்போல வரலாறு காணாத விதமாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக, கடந்த 10 நாளில் வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.30,000-ம், ஒரு கிராமுக்கு ரூ.30-ம் அதிகரித்துள்ளது.

2025 ஆம் ஆண்டில் வெள்ளி முதலீட்டாளர்களுக்கு அதிக லாபத்தை வழங்கியது என சொல்லப்படுகிறது. அக்டோபர் 12-ம் தேதி, ஒரு கிராம் வெள்ளி ரூ.187 மற்றும் ஒரு கிலோ வெள்ளி ரூ.1,87,000 விற்கப்பட்டது.

தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் மக்கள் வெள்ளியில் முதலீடு செய்ய அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இதன் காரணமாக வெள்ளி விலை உயர்ந்து வருகிறது. இதனால் வெள்ளியில் முதலீடு செய்யும் மக்களின் எண்ணிக்கை பெருகி வரும் நிலையில் உள்ளது.

சூரிய மின்தகடு, லித்தியம் பேட்டரி, மின்சார வாகனங்கள், மின்கம்பிகள், கைப்பேசிகள், கணினிகள், செயற்கை நுண்ணறிவு சாதனங்கள் ஆகியவற்றில் வெள்ளியின் பயன்பாடு அதிகரித்துள்ளதால் வெள்ளி விலை தொடர்ந்து உயர்கிறது.

உலகளவில் பொருளாதார சூழ்நிலை, அமெரிக்க டாலரின் மதிப்பு, வட்டி விகிதங்கள் மற்றும் பங்குச்சந்தை நிலவரம் போன்றவை தங்கம் மற்றும் வெள்ளியின் விலையை தீர்மானிக்கின்றன.

கடந்த 2023 இல் வெள்ளி அதிகபட்சம் ரூ.63,000-க்கு விற்கப்பட்டதை நோக்கி, இப்போது ரூ.1.87 லட்சத்தை கடந்துள்ளதும், வணிகர்கள் மற்றும் பொருளாதார வல்லுநர்கள் இதுவரை என்றென்றும் இல்லாத அளவுக்கு வெள்ளி விலை உயர்வாக உள்ளது என கூறுகின்றனர்.

உலகளவில் இந்தியா, அமெரிக்கா, சீனா போன்ற நாடுகள் தொழிற்சாலை தேவைக்காக வெள்ளியை அதிக அளவில் வாங்கி வருகின்றன. 2023 இல் சோலார் துறையில் வெள்ளி பயன்பாடு 142 மில்லியன் அவுன்ஸ் இருந்தது. 2024 இல் அதுவே 197.6 மில்லியன் அவுன்ஸுக்கு உயர்ந்து, ஒரே ஆண்டில் 40% அதிகரிப்பை காட்டியுள்ளது.

சோலார், மின் வாகனங்கள், மின்சார கட்டமைப்புகளின் விருத்தி காரணமாக அடுத்த மூன்று ஆண்டுகளில் வெள்ளி தேவையில் 7-12 சதவீதம் உயர்வு ஏற்படும் என்று வல்லுநர்கள் எதிர்பார்க்கின்றனர்.

வெள்ளி விலை உயர்வால், நடுத்தர வர்க்கத்தையும் பொருளாதார ரீதியிலும் பின்தங்கியவர்கள் தங்கத்திற்கு பதிலாக வெள்ளி நகைகள் மற்றும் கட்டிகளை வாங்க ஆர்வம் காட்டுகின்றனர்.

Related News

Latest News