இன்றைய டிஜிட்டல் உலகில் எங்கு பார்த்தாலும் காணப்படும் “QR கோடு” அதாவது Quick Response Code ஜப்பானில் தான் தோன்றியது. 1994-ம் ஆண்டு Denso Wave என்ற நிறுவனத்தில் பணியாற்றிய பொறியாளர் மசாகி ஹிரோ என்பவர் இதை கண்டுபிடித்தார்.
அந்த காலத்தில், ஆட்டோமொபைல் spare parts உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளில், Barcode மூலம் பொருட்களை கண்காணித்தனர். ஆனால் பார்கோடில் மிகக் குறைந்த தகவல்களை மட்டுமே சேமிக்க முடிந்தது. இதனால், ஒரே கோடில் அதிக தகவலை விரைவாக ஸ்கேன் செய்யக்கூடிய முறையை உருவாக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
இதற்கான தீர்வாக, ஹிரோவின் குழு 2D அடிப்படையில் QR கோடினை வடிவமைத்தது. இதில் எண்கள், எழுத்துகள் மட்டுமல்லாமல் ஜப்பானிய காஞ்சி (Kanji) எழுத்துக்களையும் சேர்த்து சேமிக்க முடிந்தது. மேலும், ஒரு QR கோடு சேதமடைந்தாலும் 30% வரை தகவலை மீட்டெடுக்கக்கூடிய Error Correction வசதியும் சேர்க்கப்பட்டது.
தொடக்கத்தில் QR கோடு தொழிற்சாலைகளில் spare parts களை கண்காணிக்க மட்டுமே பயன்படுத்தப்பட்டது. ஆனால் பின்னர் அதன் வேகமான ஸ்கேன் தொழில்நுட்பமும், அதிக அளவு தகவல் சேமிக்கும் திறனும் காரணமாக வங்கி, சில்லறை வணிகம், விளம்பரங்கள், மருத்துவ துறை உள்ளிட்ட பல துறைகளில் விரைவாக பரவியது.
இன்று, ஸ்மார்ட்போன் பயன்பாடு அதிகரித்ததால், QR கோடு பணம் பரிமாற்றம், டிக்கெட் முன்பதிவு, வலைத்தள இணைப்பு போன்ற பல தேவைகளுக்கு அத்தியாவசியமாக மாறியுள்ளது. மொத்தத்தில், சாதாரண spare parts கண்காணிப்புக்காக உருவான QR கோடு, இன்று உலகம் முழுவதும் மக்கள் வாழ்வை எளிதாக்கும் டிஜிட்டல் பாலமாக திகழ்கிறது.
