உலக நாடுகளில் இருந்து துண்டிக்கப்பட்டு தனக்கென தனித்த சட்டதிட்டங்களுடன் சர்வாதிகார ஆட்சியின் கீழ் உள்ள நாடு வட கொரியா.குறிப்பாக கடந்த நூற்றாண்டுகளாக ஒற்றைக் குடும்ப ஆட்சியின் கீழ் வட கொரியா இயங்கி வருகிறது. அதன் தற்போதைய அதிபராக கிட்டத்தட்ட மன்னராகவே கிம் ஜாங் உன் உள்ளார்.
வடகொரியாவின் மக்களின் வாழ்க்கை நிலை குறித்து வெளியுலகிற்கு இன்னும் புரியாத புதிரானதாகவே இருந்து வருகிறது. கடுமையான கட்டுப்பாடுகளுடன் மக்கள் தங்கள் அன்றாட வாழ்நாளை கடத்தவே மிகவும் சிரமப்படுகின்றனர் என்பது தென் கொரியா மற்றும் பிற உலக நாடுகளின் கருத்து.
இந்த நிலையில், Hamburger, Ice cream, Karaoke ஆகிய ஆங்கில சொற்களை பயன்படுத்த வடகொரிய அரசு தடை விதித்துள்ளது. சொற்கள் பயன்பாட்டில் மேற்கத்திய நாடுகள் மற்றும் தென் கொரியாவின் தாக்கத்தைத் தவிர்த்து, அதற்கு இணையான அரசு அங்கீகரித்த சொற்களை பயன்படுத்த சுற்றுலாத் தலங்களுக்கு வடகொரியா உத்தரவிட்டுள்ளது. ஹாம்பர்கருக்கு டஜின்-கோகி கியோப்பாங் (மாட்டிறைச்சியுடன் இரட்டை ரொட்டி) என்றும், ஐஸ்கிரீமுக்கு எசுகிமோ (எஸ்கிமோ) என்றும் சொல்ல அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இதைத்தொடர்ந்து சுற்றுலா தலங்களில் வேலை பார்க்கும் வழிகாட்டிகள் 3 மாத பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். சுற்றுலா வழிகாட்டிகள் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளிடம் பேசும்போது கூட ஆங்கில வார்த்தைகளை பயன்படுத்த கூடாது என்று கடுமையாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
