Saturday, June 28, 2025

TELEGRAM ல இப்படி ஒரு ‘BOT’ ஆ? 99 ரூபாய் தான்! எச்சரிக்கும் வல்லுநர்கள்! உஷாரா இருங்க !

இந்தியாவில் சமீபத்தில் ஒரு அதிர்ச்சி தரும் தகவல் கசிவுச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. “டெலிகிராம்” என்ற மெசேஜிங் செயலியில், ஒரு தானியங்கி பாட் செயலி இந்தியாவின் குடிமக்கள் குறித்த முக்கியமான தனிப்பட்ட தகவல்களை வெறும் ரூ.99க்கே விற்பனை செய்து வருகிறது.

இந்த பாட் செயலியில், யாருடையவாயினும் மொபைல் எண்ணை மட்டும் உள்ளீடு செய்தாலே போதும் — அந்த நபரின் பெயர், முகவரி, ஆதார் எண், பான் எண், வாக்காளர் அடையாள எண், தந்தையின் பெயர் என அனைத்து விவரங்களும் சில வினாடிகளில் கிடைத்துவிடுகிறது.

இந்த பாட் ஒரு வகை கட்டண அடிப்படையிலான முறையில் இயங்குகிறது. குறைந்த அளவிலான தகவல்களுக்கு ரூ.99 மட்டுமே, ஆனால் மிகுந்த அளவிலான விரிவான தரவுகளுக்கான தேடல்களுக்கு ரூ.4,999 வரையும் செலவாகிறது. இது போன்ற தரவுகள், முன்னாள் தரவுக் கசிவுகள், பாதுகாப்பு குறைவான இணையதளங்கள், அல்லது நிதி நிறுவனங்கள் வழியாக திருடப்பட்டிருக்கலாம் என்று இணைய பாதுகாப்பு நிபுணர்கள் சந்தேகிக்கின்றனர்.

இத்தகைய தனியுரிமை மீறல்கள், ஒருவருடைய அடையாளம் திருடப்படுவதற்கும், நிதி மோசடிகள் மற்றும் சமூக ஊடக துன்புறுத்தலுக்கும்கூட வழிவகுக்கும். குறிப்பாக இந்த பாட், குறியாக்கம் செய்யப்பட்ட அதாவது end-to-end encryption டெலிகிராம் செயலியில் இயங்குவதால், குற்றவாளிகளை கண்டறிதல் சிரமமாக இருக்கிறது.

இத்தகைய குற்றங்களை கட்டுப்படுத்துவதற்கு, தரவுக் காக்கும் சட்டங்கள், குற்றச்செயல் கண்டறியும் கருவிகள், மற்றும் செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான கண்காணிப்பு முறைகள் கட்டாயமாகப்பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. டெலிகிராமைப் போன்ற இணைய தளங்கள், சட்டவிரோதமான பாட் செயலிகளை உடனடியாக கண்டறிந்து நீக்க வேண்டும்.

இந்த சூழ்நிலையில், நாமும் எச்சரிக்கையாக இருப்பது அவசியம்:

உங்கள் மொபைல் எண், ஆதார் எண், பான் எண் போன்ற தரவுகளை பொதுமக்கள் பார்வைக்கு வைக்காதீர்கள்.

உங்கள் வங்கிக் கணக்குகள் மற்றும் ஆன்லைன் பண பரிவர்த்தனை செயலிகளை அடிக்கடி கண்காணிக்கவும்.

மேலும் வலுவான கடவுச்சொற்கள் மற்றும் இரட்டைக் கட்டுப்பாட்டு அதாவது  Two-Factor Authentication பாதுகாப்பு அம்சங்களை பயன்படுத்தவும்.

குறிப்பாக சந்தேகத்திற்கிடமான இணைய இணைப்புகள் மற்றும் செய்திகளைத் திறக்காமல் தவிர்க்கவும் வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்தது வருகின்றனர்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news