பிரபல கிரிக்கெட் நட்சத்திரம் ஒருவருக்கு எதிராக, 11 பெண்கள் பாலியல் குற்றச்சாட்டு புகாரை அளித்திருப்பதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
வெஸ்ட் இண்டீஸின் கயானா பகுதியை சேர்ந்த பரபரா, என்னும் கிராமத்தை சேர்ந்தவர் 25 வயது சமர் ஜோசப். கிரிக்கெட் மீது தீராத ஆர்வம் கொண்ட இவர், ஆரம்பத்தில் தனியார் நிறுவனமொன்றில் செக்யூரிட்டியாக பணிபுரிந்து பின்னர், கயானா கிரிக்கெட் அணியின் நெட் பவுலராக ஆனார். இவரின் பந்துவீச்சால் கவரப்பட்ட கயானா அமேசான் வாரியர்ஸ் அணி, கரீபியன் பிரீமியர் லீக் தொடரில் வாய்ப்பு அளித்தது.
அந்த ஆண்டு கயானா அணி சாம்பியன் பட்டம் வென்றதால் இவர்மீதும் புகழ் வெளிச்சம் விழ, அங்கிருந்து தேசிய அணிக்கு தேர்வானார். கடந்த 2024ம் ஆண்டு கப்பாவில் வைத்து ஆஸ்திரேலியாவை வெஸ்ட் இண்டீஸ் வென்றது. 27 ஆண்டுகளுக்கு பிறகு ஆஸ்திரேலியாவை அவர்களின் சொந்த மண்ணில் வெஸ்ட் இண்டீஸ் வீழ்த்திட, ஜோசப்பின் அபார பந்துவீச்சே முக்கிய காரணமாகும்.
இதையடுத்து ஒரே நாளில் சமர் ஜோசப் உலகம் அறிந்த ஹீரோவாக உருமாறினார். தற்போது வெஸ்ட் இண்டீஸ்க்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 3 டெஸ்ட், 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. ஜூன் 25ம் தேதி தொடங்கிய முதல் டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி டெஸ்ட் தொடரில், 1-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா முன்னிலை வகிக்கிறது.
2 இன்னிங்சிலும் சேர்த்து சமர் 9 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். 2வது டெஸ்ட் போட்டி ஜூலை 3ம் தேதி தொடங்குகிறது. இந்தநிலையில் தான் சமர் ஜோசப்புக்கு எதிராக சிறுமி உட்பட 11 பெண்கள் பாலியல் வன்கொடுமை புகார் அளித்துள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. ‘Monster in Maroon’ என்னும் தலைப்பில் கயானாவின் உள்ளூர் பத்திரிக்கை இதுகுறித்து செய்தி வெளியிட்டு இருக்கிறது.
ஆனால் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம், சமர் ஜோசப் மீதான குற்றச்சாட்டை அப்பட்டமாக மறுத்துள்ளது. கிரிக்கெட் உலகில் சிங்கமாகத் திகழும் ஆஸ்திரேலியாவை அதன் குகையிலேயே அடக்கியவர் என்பதால், சமர் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியத்தின் சொத்தாக பார்க்கப்படுகிறார். இதனால் சமர் ஜோசப்பை காப்பாற்றும் முயற்சிகளும் தற்போது தீவிரமடைந்து இருக்கிறதாம்.
கடந்த 2024ம் ஆண்டு லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி, இவரை 3 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது. மெகா ஏலத்திற்கு முன் அந்த அணியால் ரூபாய் 75 லட்சத்திற்கு, சமர் ஜோசப் தக்க வைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.