உலகத்தில் நடக்கும் போர்கள், சண்டைகள் எல்லாம் யாரோ ஒரு நாடு கோபப்பட்டதாலோ, யாராவது பக்கத்துக்கு நியாயம் கிடைக்க வேண்டுமென்று நடந்தவை அல்ல. அவை எல்லாமே மிக அழுத்தமான, திட்டமிட்ட நாடகங்கள். அந்த நாடகங்களுக்கு பின்னாலிருக்கும் இயக்குநர்கள் – பெரும் ஆயுத வியாபாரிகள். உலகில் அமெரிக்கா, ரஷ்யா, சீனா, பிரான்ஸ் போன்ற நாடுகள் மட்டுமல்ல, இவர்களுடன் கூட்டாக இருக்கும் பல குட்டிநாடுகளும் இந்த நாடகத்தில் பங்கு வைக்கும் புள்ளிகள்தான்.
முக்கியமாக, அமெரிக்கா மற்றும் ரஷ்யா – உலகின் மிகப்பெரிய ஆயுத வியாபாரிகள். யாராவது சண்டை போட்டால்தான் இவர்கள் தயாரிக்கும் ஆயுதங்கள் விற்பனை ஆகும். அது இல்லையென்றால் அந்த ஆயுதக் கிடங்குகள் பூச்சி போட்டு கிடக்கும். அதனால்தான் சில நேரம், சில இடங்களில், யாராலும் எதிர்பாராத அளவுக்கு சண்டைகள் திடீரென உருவாகின்றன..
அதற்கு உதாரணமாக நேட்டோ அமைப்பை எடுத்துக்கொள்ளலாம். வடக்கு அட்லாண்டிக் ஒப்பந்தத்தின் பேரில் உருவான இந்த ராணுவ கூட்டமைப்பு, பாதுகாப்புக்கான அமைப்பாக சொல்லப்படுகிறது. ஆனால் உண்மையில் இது ஒரு சர்வதேச ராணுவ சக்தி குழுமம். இதில் 30 நாடுகள் உள்ளன. அமெரிக்கா தான் அதனுடைய தலைமையிலிருக்கும் தலைமை இயக்குநர்.
தற்போது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், நேட்டோ உறுப்பினர்கள் எல்லாம் தங்களது பாதுகாப்பு செலவினங்களை அதிகரிக்க வேண்டும் என்று கடுமையாகக் கேட்டுக்கொண்டு இருக்கிறார். ஆண்டுதோறும், ஒவ்வொரு நாடும் தங்கள் ஜிடிபியின் 5 சதவீதத்தை பாதுகாப்புக்காக மட்டும் செலவிடவேண்டும் – இது தான் புதிய திட்டம். அதனுடன், நேட்டோவில் இருக்கும் ஒரே ஒரு நாட்டின்மீது தாக்குதல் நடந்தால், அதனை எல்லா உறுப்புநாடுகளின் மீதான தாக்குதலாகவே கருதி பதிலடி கொடுக்க வேண்டும் என்ற முடிவும் எடுக்கப்பட்டுள்ளது.
இந்த முடிவுகள் எல்லாம் நியாயமானவையா என்று கேட்ட நாடுகளும் இருந்தன. ஸ்பெயின், பெல்ஜியம், ஸ்லோவேகியா போன்ற நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தன. “நாங்கள் எவ்வளவு செலவழிக்க வேண்டும் என்பதை நாங்களே முடிவெடுக்கிறோம்” என ஸ்லோவேகியா நேரடியாக எதிர்வினை தெரிவித்தது. ஆனால் பெரும்பாலான நாடுகள், டிரம்ப் அழுத்தத்தால் சம்மதிக்க நேர்ந்தது. 2035க்குள் இந்த இலக்கை அடைய அனைத்து ஏற்பாடுகளும் தொடங்கப்பட்டுவிட்டன.
இதற்கெல்லாம் மேல் பரபரப்பை உண்டாக்கிய சம்பவம் – டிரம்ப் வெளியிட்ட ஒரு தனிப்பட்ட செய்தி. நேட்டோவின் புதிய பொதுச் செயலாளர் மார்க் ருட்டே, டிரம்புக்கு அனுப்பிய மெசேஜ் ஒன்றின் ஸ்கிரீன் ஷாட்டை அவர் நேரடியாக பத்திரிகையாளர்களிடம் காட்டினார். அந்த மெசேஜில், “ஈரானில் நீங்கள் எடுத்த நடவடிக்கை மிக வலிமையானது, யாரும் செய்யத் துணியாத ஒன்று, நம் அனைவரையும் பாதுகாக்கும் செயலாக இருந்தது” என்று அவர் புகழ்ந்திருந்தார்.
இந்த மெசேஜ் உண்மையானதா? போலியா? என்பதில் சிக்கல்கள் எழுந்தன. இது உண்மை என்றால், டிரம்ப் உலகளவில் எப்படி செயல்படுகிறார் என்பதற்கான ஒரு சாட்சி. ஆனால் இது ஒரு போலியாக உருவாக்கப்பட்ட செய்தி என்றால், அது பெரிய சர்ச்சையை உண்டாக்கும் – என்பதே பலரின் சந்தேகம்.
இப்போது நீங்கள் கேட்க வேண்டிய கேள்வி ஒன்று – இந்த எல்லா தீர்மானங்களும் உண்மையில் பாதுகாப்புக்காகவா? இல்லையென்றால் ஆயுத வியாபாரத்திற்காகவா? என்று தான் .உலக நாடுகள் ஒன்று மேல் ஒன்று பாயும் சூழல், யாருக்கு இலாபம் கொடுக்கிறது? யார் அந்த நிழல் அரசியலை இயக்குகின்றனர்? என்கின்ற கேள்விகளுக்கெல்லாம் பதில்கள் சில நேரம் எளிதாகக் கிடைக்காது. ஆனால் கேள்விகளை கேட்பது தான் புத்திசாலித்தனம்.