Wednesday, June 25, 2025

சீனாவில் கண்டறியப்பட்ட 20 கொடிய வைரஸ்கள்! நிபா விட மோசமானது?

சீனாவின் யுன்னான் மாகாணத்தில் வௌவால்களில் கண்டறியப்பட்ட 20 புதிய வைரஸ்கள் உலகம் முழுவதும் அச்சத்தை உருவாக்கி இருக்கின்றன. இவை இரண்டும் நிபா மற்றும் ஹென்ட்ரா வைரஸ்களுடன் நெருக்கமாக தொடர்புடையவை. இந்த கண்டுபிடிப்புகள், மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் இடையே வைரஸ் பரவக்கூடிய அபாயத்தை பற்றி விஞ்ஞானிகள் நீண்ட காலமாக எச்சரித்து வந்ததை மீண்டும் உறுதிப்படுத்துகின்றன. குறிப்பாக பழத்தோட்டங்களுக்கு அருகில் பிடிக்கப்பட்ட பழ வௌவால்களிலிருந்து இந்த வைரஸ்கள் வந்துள்ளன. மக்கள் மற்றும் பண்ணை விலங்குகள் வனவிலங்குகளுடன் நெருக்கமாக இருக்கும் இடங்களில் இத்தகைய ஆபத்துகள் அதிகம்.

PLOS Pathogens என்ற சார் விஞ்ஞான இதழில் வெளியான இந்த ஆய்வில், நமக்குத் தெரியாத பல வகையான வைரஸ்கள் வௌவால்களால் பரப்பப்படுகின்றன என்பதையும், காலநிலை மாற்றம், விவசாய விரிவாக்கம், நகரமயமாக்கல் போன்றவை இந்த ஆபத்துக்களை அதிகரிக்கச் செய்கின்றன என்பதையும் தெளிவாகக் கூறுகின்றன. இது போலவே எபோலா, சாஸ், கோவிட்-19 போன்ற நோய்களும் விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவியவைதான்.

இந்த ஆராய்ச்சியில் சீன மற்றும் சிட்னி பல்கலைக்கழக விஞ்ஞானிகள் நான்கு ஆண்டுகளாக 142 வௌவால்களின் சிறுநீரகங்களை ஆய்வு செய்து, மொத்தம் 22 வைரஸ்களை கண்டறிந்துள்ளனர். இதில் 20 வைரஸ்கள் இதுவரை அறியப்படாதவை. அதில் நிபா மற்றும் ஹென்ட்ரா தொடர்புடைய ஹெனிபா வைரஸ்கள் இரண்டு இருந்தன. இந்த வைரஸ்கள் மூளை வீக்கம், சுவாச பாதிப்பு போன்றவற்றை ஏற்படுத்த முடியும், மேலும் இறப்பு விகிதம் 75% வரை இருக்கலாம்.

ஆய்வில் மற்றொரு முக்கியமான விஷயம் என்னவென்றால், பெரும்பாலான பழைய ஆய்வுகள் வௌவால்களின் மலத்தில் கவனம் செலுத்தினாலும், இந்த ஆய்வில் சிறுநீரக திசுக்கள் ஆய்வு செய்யப்பட்டது. சிறுநீர் வழியாக வைரஸ்கள் வெளியேற வாய்ப்பு இருப்பதால், அது பரவுவதற்கான முக்கிய வழியாக கருதப்படுகிறது. விவசாயப் பகுதிகளை அண்டிய வௌவால்களில் இந்த ஹெனிபா வைரஸ்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. வௌவால்களின் சிறுநீர் பழங்களை மாசுபடுத்தி, அதை மக்கள் அல்லது கால்நடைகள் உண்ணும்போது பரவும் அபாயம் உள்ளது.

இந்த கண்டுபிடிப்புகள் மிக முக்கியமான விலங்குவழி அச்சுறுத்தல்களை வெளிப்படுத்துகின்றன என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். இவை மனிதர்களுக்கோ அல்லது பண்ணை விலங்குகளுக்கோ பரவலாம் என்பதற்காக கவனமும், தயார்ப்பாடும் அவசியம். ஆனால் இதற்குப் பொறுப்பான ஆய்வாளர்கள் சிலர், இது அரசியல் ரீதியாக உணர்வுப்பூர்வமான விஷயம் என்பதால் விரிவாக பேச மறுத்துள்ளனர்.

இவை எவ்வளவு ஆபத்தானவை என்பதை இன்னும் கண்டறிய இயலவில்லை என்றாலும், இது விஞ்ஞான ரீதியாக ஒரு முக்கியமான முன்னேற்றம் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். வௌவால் வைரஸ்களின் பன்முகத்தன்மையை இந்த ஆய்வு உறுதி செய்கிறது. ஆனால், அதே நேரத்தில் “இதில் கவனமாக இருக்க வேண்டியது உண்மைதான், ஆனால் அதிகமாக பதட்டப்பட வேண்டிய நிலை இல்லை” என்கிறார் டியூக்-என்யூஎஸ் மருத்துவப் பள்ளி பேராசிரியர் லிங்ஃபா வாங்.

இதற்கெல்லாம் ஒரு மிகச் சுருக்கமான செய்தி என்னவென்றால் – வௌவால்கள் எவ்வளவு ஆபத்தான நோய்களை தங்களுடன் சுமந்து செல்கின்றன என்பதை இன்னும் நாம் முழுமையாக புரிந்து கொள்ளவில்லை. ஆனால் இயற்கையோடு நாம் எவ்வளவு நெருக்கமாக இருக்கிறோமோ, அவ்வளவு வைரஸ்களின் அபாயமும் நெருங்குகிறது என்பதே உண்மை.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news