Monday, June 23, 2025

”கைகட்டி வேடிக்கை பார்க்க மாட்டோம்”  அமெரிக்காவிற்கு சீனா நேரடி வார்னிங்..!!

ஈரான் –  இஸ்ரேல் போரால் 3வது உலகப்போர் மூண்டு விடுமோ என்று உலக நாடுகள் ஒரு பக்கம் அஞ்சி நிற்க, மறுபுறம் வல்லரசு நாடுகள் இரண்டு நாடுகளுக்கும் வரிந்துகட்டி சப்போர்ட் செய்து வருகின்றன. இந்தநிலையில் அமெரிக்கா தன்மீதான நம்பகத்தன்மையை இழந்து விட்டதாக, சீனா ஐ.நா சபையில் விமர்சனம் செய்துள்ளது.

மத்திய கிழக்கில் உடனடி போர் நிறுத்தத்தை அறிவிக்க வேண்டும் என்று ரஷ்யா, சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட 15 உறுப்பினர்களை கொண்ட அமைப்பு முன்மொழிந்தது. இதையடுத்து ஈரானின் அணு உலைகள் மீதான அமெரிக்காவின் தாக்குதல் குறித்து விசாரிக்க ஐ.நா சபை அண்மையில் கூடியது.

இந்த கூட்டத்தில் சீனா, அமெரிக்காவை கடுமையாக விமர்சனம் செய்துள்ளது. அமெரிக்கா, இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவிப்பது குறித்து சீனா, ” போரின் பரவலைத் தவிர்க்க இஸ்ரேல் உடனடியாக தாக்குதலை நிறுத்த வேண்டும். ஈரான் மீதான தாக்குதல் மூலம் ஒரு நாடாகவும், சர்வதேச பேச்சுவார்த்தைகளில் பங்கேற்பாளராகவும் அமெரிக்கா தன்மீது இருந்த நம்பகத்தன்மையும் இழந்துவிட்டது. ஈரானிலிருந்து சீன குடிமக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்,” இவ்வாறு தெரிவித்துள்ளது.

இது குறித்து சீனாவின் வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் லின் ஜியான், தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில், “ஈரான் மீதான அமெரிக்காவின் தாக்குதல்களையும், IAEA-வின் பாதுகாப்புகளின் கீழ் அணுசக்தி நிலையங்கள் மீது குண்டுவீச்சு நடத்துவதையும் சீனா கடுமையாகக் கண்டிக்கிறது.

அமெரிக்காவின் நடவடிக்கைகள் ஐ.நா. விதி மற்றும் சர்வதேச சட்டத்தின் நோக்கங்கள் மற்றும் கொள்கைகளை கடுமையாக மீறுகின்றன. மேலும் மத்திய கிழக்கில் பதட்டங்களை அதிகப்படுத்தியுள்ளன. மோதலில் ஈடுபட்டுள்ள தரப்பினரை, குறிப்பாக இஸ்ரேலை, விரைவில் போர்நிறுத்தத்தை எட்டவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், பேச்சுவார்த்தையைத் தொடங்கவும் சீனா அழைப்பு விடுக்கிறது. சர்வதேச சமூகத்துடன் இணைந்து முயற்சிகளை ஒன்றிணைத்து நீதியை நிலைநிறுத்தவும், மத்திய கிழக்கில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை மீட்டெடுக்கவும் சீனா தயாராக உள்ளது,” என்று அமெரிக்காவை நேரடியாகத் தாக்கி இருக்கிறார்.

சமீபகாலமாக மாறிமாறி வரிவிதித்து விளையாடிய அமெரிக்கா – சீனா நாடுகள், அண்மையில் தான் சமாதன முயற்சிகளை மேற்கொண்டு வரிவிதிப்பை நிறுத்தி வைத்தன. இதையடுத்து சீனாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள போவதாக, டிரம்பும் மகிழ்ச்சியுடன் தெரிவித்து இருந்தார். தற்போது ஈரான் -இஸ்ரேல் போரால் அமெரிக்கா – சீனா என இரண்டு வல்லரசு நாடுகளும் மீண்டும் மோதிக்கொள்ளும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

சீனாவின் இந்த மிரட்டலுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் அடிபணிவாரா? இல்லை எரிகிற தீயில் மேலும் எண்ணெயை ஊற்றுவது போல, இஸ்ரேலுக்கு தொடர்ந்து உதவி செய்யப் போகிறாரா? என்பதை நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news