இந்தியா – இங்கிலாந்து இடையிலான முதல் டெஸ்ட் போட்டி இங்கிலாந்தின் லீட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதன் முதல் இன்னிங்ஸில் கேப்டனாக அறிமுகமான சுப்மன் கில், துணை கேப்டன் ரிஷப் பண்ட், ஓபனர் யஜஸ்வி ஜெய்ஸ்வால் மூவரும் சதமடித்து அசத்தி இருக்கின்றனர்.
அதேநேரம் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தமிழக வீரர் சாய் சுதர்சன், 8 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணியில் இடம்பிடித்த கருண் நாயர் இருவரும், கிடைத்த பொன்னான வாய்ப்பை வீணடித்து உள்ளனர். இருவருமே தலா 4 பந்துகளை சந்தித்து டக் அவுட்டாகி பெவிலியன் திரும்பினர்.
இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டில் King Kohli அறிமுகமான, அதே ஜூன் 20ம் தேதி சாய் சுதர்சனும் அறிமுகமாகி இருக்கிறார். இதுவரை விராட் இறங்கிய 3வது இடத்தில் தான் சாய் சுதர்சனும் இறங்கினார். இந்த ஒற்றுமைகளால் விராட் போல சுதர்சனும் ஜொலிப்பார் என்று, ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்தனர்.
ஆனால் டக் அவுட் ஆகி ரசிகர்களுக்கு மிகப்பெரும் அதிர்ச்சியை பரிசளித்துள்ளார். மறுபுறம் கடந்த 2016ம் ஆண்டுக்கு பிறகு BCCIயால் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வந்த, 33 வயது வீரர் கருண் நாயர் உள்ளூர் தொடர்களில் அபாரமாக ஆடி, 8 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இந்திய அணியில் இடம் பிடித்தார்.
பயிற்சி போட்டியில் சிறப்பாக செயல்பட்டதால், கருண் மீதும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால் சாய் சுதர்சன் போல 4 பந்துகளை எதிர்கொண்ட கருண் நாயர், டக் அவுட்டாகி தன்மீதான நம்பிக்கையை தகர்த்துள்ளார். இருவருமே இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பந்தில் தான் ஆட்டமிழந்துள்ளனர்.
முன்னதாக பயிற்சி போட்டியில் சிறப்பாக செயல்பட்ட, அபிமன்யூ ஈஸ்வரனுக்கு வாய்ப்பு அளிக்கலாம் என்று தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் முடிவு செய்தாராம். ஆனால் கேப்டன் கில் தலையிட்டு சாய் சுதர்சனுக்கு வாய்ப்பு அளிக்கும்படி வேண்டுகோள் விடுத்தாராம்.
இதனால் கில் – கம்பீர் இடையே மோதல் வெடித்ததாகவும் தகவல்கள் வெளியாகின. தற்போது கம்பீரின் தேர்வு தான் சரி என்று நினைக்கும்படி சாய் சுதர்சன் ஆட்டம் அமைந்து விட்டது. இதனால் அடுத்தடுத்து அவருக்கு வாய்ப்பு கிடைக்குமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. கருண் நாயர் அனுபவ வீரர், அத்துடன் இங்கிலாந்து கவுண்டி போட்டிகளிலும் விளையாடி இருக்கிறார்.
எனவே அவருக்கு மீண்டும் ஒரு வாய்ப்பளிக்க கம்பீர் தயங்க மாட்டார். ஆனால் சுதர்சன் இளம்வீரர் என்பதால் இனிமேல் அவர் பெஞ்சில் அமர வைக்கப்படவே வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன. எனவே சுதர்சன், கருண் நாயர் இருவருக்கும் அடுத்தடுத்த டெஸ்ட் போட்டிகளில் வாய்ப்பு கிடைக்குமா? என்பதை நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.