ஈரான் – இஸ்ரேல் இடையிலான தாக்குதல் தற்போது உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. இரண்டு நாடுகள் இடையிலான யுத்தத்தை உலக நாடுகள் உற்று நோக்கி வருகின்றன. இதனால் மொத்த கவனமும் ஈரான் -இஸ்ரேல் மீதுதான் இருக்கிறது.
இந்தநிலையில் அண்டை நாடான பாகிஸ்தான், சத்தமில்லாமல் சம்பவமொன்றை செய்துள்ளது. சீனாவிடம் இருந்து மொத்தமாக 40 J-35 ஸ்டெல்த் பைட்டர் ஜெட்களை வாங்குவதற்கு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. சீனா தயாரித்துள்ள இந்த ஜெட்கள் ஒலியைக் காட்டிலும் அதிக வேகத்தில் பயணிக்க கூடியவை.
ரேடார், சென்சார் என்று எதிலும் சிக்காது. இரட்டை இன்ஜின்களுடன் மிகவும் மேம்பட்ட தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்படுகின்றன. இவ்வளவு சிறப்பு வாய்ந்த இந்த ஜெட்களை பாகிஸ்தானுக்கு பாதி விலையில் தர சீனா முன்வந்துள்ளது. பொதுவாக ஒரு J-35 ஸ்டெல்த் பைட்டர் ஜெட்டின் விலை 8 கோடியே 25 லட்சமாக உள்ளது.
இதன்படி பார்த்தால் 40 ஜெட்களின் மொத்த விலை 330 கோடி ரூபாயாகும். ஆனால் அதில் பாதியை மட்டும் கொடுத்தால் போதும் என்று பாகிஸ்தானுக்கு, சீனா தாராள சலுகை காட்டியிருக்கிறது. இதில் நிலப்பரப்பு மற்றும் கடற்பரப்புக்கு ஏற்ற வகையில், இரண்டு வகையிலான ஜெட்களை சீனா அறிமுகம் செய்துள்ளது.
ஆனால் பாகிஸ்தான் இதில் நிலத்தில் தாக்கக்கூடிய, ஜெட் வகைகளை மட்டும் தான் ஆர்டர் செய்திருக்கிறது. இந்த ஜெட் ரகங்களை எப்படி இயக்குவது? என்று கற்றுக் கொள்வதற்காக, பாகிஸ்தான் விமானிகள் சீனாவில் கடந்த 6 மாதங்களாக தங்கி இருக்கின்றனராம்.
2025ம் ஆண்டு இறுதிக்குள் சீனா, இந்த J-35 ஸ்டெல்த் பைட்டர் ஜெட்களை பாகிஸ்தானிற்கு வழங்கவுள்ளது. இந்தநிலையில் பாகிஸ்தான் வாங்கும் இந்த ஜெட்களால் இந்தியாவிற்கு ஆபத்து ஏற்படலாம் என்ற அச்சம் ஏற்பட்டு இருக்கிறது. போர் பதற்றத்தின்போது இந்தியாவின் முப்படைகளும் ஒன்றிணைந்து பாகிஸ்தானின் கண்ணில் விரலைவிட்டு ஆட்டின.
இதனால் இந்தியாவிற்கு தகுந்த பதிலடி கொடுக்கத்தான், சீனாவிடம் இந்த ஜெட் ரகங்களை பாகிஸ்தான் வாங்குவதாக கூறப்படுகின்றது. ஏனெனில் இந்தியாவில் இந்தவகை ஜெட் ரகங்கள் கைவசம் இல்லை. தற்போது தான் ஸ்டெல்த் பைட்டர் ஜெட்களை தயாரிக்கும் பணிகளில் இந்தியா இறங்கியுள்ளது.
அது முழுவடிவம் பெறுவதற்கு இன்னும் 10 ஆண்டுகள் ஆகிவிடும். அதாவது 2035ம் ஆண்டு வாக்கில் தான், இந்தியாவால் ஸ்டெல்த் பைட்டர் ஜெட் ரகங்களை பயன்பாட்டுக்குக் கொண்டுவர முடியும். இதனால் தான் பாகிஸ்தானின் இந்த நடவடிக்கை மிகுந்த கவனம் பெற்றுள்ளது.
அதிலும் இந்தியாவுடன் எல்லையை பகிர்ந்து கொள்ளும் சீனா, பாகிஸ்தான் இரண்டு நாடுகளிடமும் ஸ்டெல்த் பைட்டர் ஜெட் ரகங்கள் இருப்பது, இந்தியாவிற்கான அச்சுறுத்தலாகவே பார்க்கப்படுகிறது. அமெரிக்காவிடம் உள்ள F 35 பைட்டர் ஜெட்டைக் காட்டிலும், சீனாவின் J-35 ஸ்டெல்த் பைட்டர் ஜெட்கள் மிகவும் மேம்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.