Saturday, June 21, 2025

திடீரென வாஷிங்டன் வந்த ‘டூம்ஸ்டே விமானம்’! ஏதோ சரி இல்லையே! இது தான் ‘அந்த’ காரணமா?

அமெரிக்கப் பாதுகாப்புத்துறையின் மிகப் பாதுகாப்பான விமானங்களில் ஒன்றான போயிங் E-4B நைட்வாட்ச் விமானமே செல்லமாக ‘டூம்ஸ்டே’ என அழைக்கப்படுகிறது. நாட்டில் அணு ஆயுத போர் அல்லது தேசிய பேரழிவின்போது இந்த விமானம் வான்வழி ராணுவ கட்டளை மையமாகச் செயல்படும் வகையில் பல்வேறு தொழில்நுட்பங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த விமானம் வாஷிங்டனில் உள்ள ஆண்ட்ரூஸ் என்ற தளத்தில் கடந்த 17ம் தேதி இரவு தரையிறங்கியிருக்கிறது. இருந்தாலும் இது தொடர்பான தகவல்கள் தற்போதுதான் வெளியாகியுள்ளன.

இந்த விமானம், அமெரிக்காவின் அதிபர், பாதுகாப்பு செயலாளர் மற்றும் பிற தேசிய பாதுகாப்பு அதிகாரிகளைப் பாதுகாக்கவும், அணு ஆயுதப் போர் நடக்கும்போது அரசாங்கத்தை இயக்கவும் உருவாக்கப்பட்டது. இந்த விமானம் கடந்த 17ம் தேதி மாலை லூசியானாவின் பாஸியர் நகரத்திலிருந்து புறப்பட்டு சுமார் 4 மணி நேரம் பயணித்து மேரிலாந்தை வந்தடைந்துள்ளது.

மொத்தம் 4 ‘E-4B நைட்வாட்ச்’ விமானங்களை அமெரிக்க விமானப்படையிடம் இருக்கின்றன. ஒவ்வொரு விமானத்திலும் 112 பேர் வரை குழுவாக பயணிக்கலாம். இது 7,000 மைல்களுக்கு மேல் செல்லும் திறன் மிக்கது.

அணு வெடிப்புகள், சைபர் தாக்குதல்கள் மற்றும் மின்காந்த விளைவுகளைத் தாக்குப்பிடிக்கக்கூடியது. அது மட்டுமல்லாமல் இந்த விமானத்தில் ஏவுகணைகளை ஏவும் வசதிகளும் இருக்கின்றன.

தற்போது இந்த விமானத்தின் வருகை இத்தனை முக்கியத்துவம் கொண்டதாக பார்க்கப்படுவதற்கு ஒரு பின்னணி இருக்கிறது. இந்த விமானம் வாஷிங்டன்னுக்குள் நுழைந்த 17ம் தேதி தான் டிரம்ப் ஈரானின் உச்ச தலைவர் நிபந்தனையின்றி சரணடைய வேண்டும் என்று எச்சரித்திருந்தார்.

பதிலுக்கு ஈரான் தரப்பிலிருந்து “சரணடைய முடியாது” என்ற பதில் வந்திருந்தது. இது நடந்த சற்று நேரத்தில்தான் ‘E-4B நைட்வாட்ச்’ விமானம் வாஷிங்டன்னில் தரையிறங்கியிருக்கிறது என்பது பலவிதமான கேள்விகளை எழுப்புவதாக உள்ளது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news