இஸ்ரேல்-ஈரான் இடையே மோதல் உச்ச கட்டத்தை அடைந்துள்ளதால் இரு தரப்பினரும் சக்திவாய்ந்த ஆயுதங்களை பயன்படுத்த திட்டமிட்டு வருகின்றனர். இந்நிலையில் உலகின் மிக ஆபத்தான வெடிகுண்டை எந்த நாட்டிடம் இருக்கிறது, அது எவ்வளவு சக்தி மிக்கது என்ற கேள்வி பலருக்கும் எழுந்துள்ளது.
உலகின் அதிபயங்கர குண்டு என்ற இடத்தை ‘Tsar Bomba’ பெற்றுள்ளது. சோவியதின் வெப்ப அணுகுண்டான இது உலகிலேயே இதுவரை தயாரிக்கப்பட்டு சோதிக்கப்பட்ட அதிக சக்திவாய்ந்த அணு ஆயுதமாக உள்ளது. இப்போது ரஷ்யா என்று அழைக்கப்படும் சோவியத் யூனியன் இதை 1961 அக்டோபரில் ஆர்க்டிக் பெருங்கடலில் உள்ள நோவயா ஜெம்லியா தீவில் சோதித்தது. அதிகாரப்பூர்வமாக AN-602 என்று பெயரிடப்பட்ட ‘Tsar Bomba’, 100 மெகாடன்கள் வெடிக்கும் திறன் கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த குண்டு ஹிரோஷிமாவில் வீசப்பட்ட அணுகுண்டை விட சுமார் 3,800 மடங்கு அதிக சக்தி வாய்ந்தது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். மிகவும் சக்தி வாய்ந்த இது காற்றில் வெடிக்கும் தொழிநுட்பத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.
‘Tsar Bomba’ 50 மெகாடன் உற்பத்தித் திறனுடையது. இது 50 மில்லியன் டன் கொண்ட வழக்கமான வெடிபொருட்களுக்குச் சமம். இதோடு ஒப்பிடும்போது இரண்டாம் உலகப் போரில் ஹிரோஷிமா மற்றும் நாகசாகியில் வீசப்பட்ட குண்டுகள் 15 முதல் 21 டன்கள் மட்டுமே. Tsar Bomba-வின் சோதனையின்போது, ஐந்து மைல் அகலமுள்ள நெருப்பு வளையம் மற்றும் வளிமண்டலத்தில் 60 கிலோ மீட்டர் உயரத்திற்கு புகை மேகத்தையும் ஏற்படுத்தி கொடூர தோற்றத்தை உண்டாக்கியது. 100 கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள அனைத்தும் பஸ்பமாக்கப்பட்டன. 160 கிலோ மீட்டர் தூரத்தில் இருந்த கட்டடங்கள் தரைமட்டமாயின. 275 கிலோமீட்டர் தாண்டியும் இதன் கதிர்வீச்சு கண்டறியப்பட்டது. இந்த குண்டு வெடித்தபோது, 1,000 கிலோமீட்டர் தூரத்துக்கு அப்பாலும் பிரகாசமான ஒளியைக் பார்க்க முடிந்தது.