உலக நாட்டாமை, வல்லரசு நாடு என மார்தட்டிக் கொள்ளும் அமெரிக்கா கூட ஈரானைக் கண்டு அஞ்சி நடுங்குகிறது. உலகத்தின் மிகச்சிறந்த உளவுத்துறையை கையில் வைத்திருந்தும் இஸ்ரேலால், ஈரானுக்கு முன் தாக்குப்பிடிக்க முடியவில்லை.
அமெரிக்காவின் பின்னால் நின்று ஈரானுக்கு எதிராக போர் நடத்துகிறது. ஒருபக்கம் இஸ்ரேலும், அமெரிக்காவும் அஞ்சி நடுங்குகின்றன. மறுபுறம் ரஷ்யாவும், வடகொரியாவும் ஈரானுக்கு நேசக்கரம் நீட்டுகின்றன. அமெரிக்கா அச்சப்படுவதற்கும், ரஷ்யா ஆதரவுக்கரம் நீட்டுவதற்கும் காரணம் ஒருவர் தான்.
அவர் தான் ஈரானின் செல்வாக்கு மிகுந்த மதகுருவும், அரசியல் தலைவருமான அயத்துல்லா அலி காமேனி. ஈரான் நாட்டின் ஜனாதிபதி, பாராளுமன்றம் மற்றும் நீதித்துறையை காட்டிலும் அதிக அதிகாரம் கொண்டவர் காமேனி. நீதிபதிகளை நியமிக்கவும், ஆயுதப் படைகளுக்கு கட்டளை இடவும் இவருக்கு உரிமையுண்டு.
அதோடு நாட்டின் முக்கிய பாதுகாப்பு அதிகாரிகளை நியமனம் செய்யும் அதிகாரமும் காமேனி வசமுள்ளது. இவரால் எந்த நேரத்திலும் ஒரு அதிகாரியை பதவி நீக்கம் செய்ய முடியும். அத்துடன் ஈரான் நாட்டு சட்டத்தை எதிர்க்கும் ஆற்றலும் இவருக்குண்டு. இதுதவிர ஒருநாட்டின் மீது போரை அறிவிக்கும் உச்சபட்ச அதிகாரமும் இவர்வசம் இருக்கிறது.
இதுமட்டுமின்றி இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC) மற்றும், ஈரானின் பிராந்திய நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்தும் குட்ஸ் படை ஆகியவற்றை, கட்டுப்படுத்தும் அதிகாரத்தையும் கொண்டுள்ளார். ஈரானின் வெளியுறவு மற்றும் இராணுவக் கொள்கையிலும் இவரால் தலையிட முடியும். மொத்தத்தில் ஒரு பேரரசனை போன்ற அதிகாரமும், உரிமைகளையும் காமேனி தன்னகத்தே கொண்டுள்ளார்.
இதனால் ஈரான் நாட்டின் ஒட்டுமொத்த அதிகாரங்களும், காமேனி ஒருவரிடமே குவிந்து கிடக்கின்றன. இந்த 86 வயதிலும் இஸ்ரேல் மட்டுமின்றி வல்லரசு நாடான அமெரிக்காவையும், அசராமல் லெப்ட் ஹேண்டில் டீல் செய்வதால், இவர் குறித்த தகவல்களை இணையத்தில் தேடுவோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் உயர்ந்து வருகிறது.
அந்தவகையில் வல்லரசு நாடுகளின் கண்ணில் விரலைவிட்டு ஆட்டும், இந்த அயத்துல்லா அலி காமெனி குறித்து இங்கே பார்க்கலாம்.
அயத்துல்லா அலி காமெனி 1939ம் ஆண்டு வடக்கு ஈரானின் மஷாத் நகரத்தில் பிறந்தார். மத போதகரான காமெனியின் தந்தைக்கு மொத்தம் எட்டு குழந்தைகள். இதில் இரண்டாவது குழந்தையான காமெனி தனது தந்தையை பின்பற்றி 1958 முதல் 1964 வரை, ஈரானின் கோம் நகரத்தில் மதகுரு படிப்பைத் தொடர்ந்தார். பின்னர் 1962ம் ஆண்டு ஈரானின் ஷாவுக்கு எதிராக, அயதுல்லா ருஹோல்லா கொமேனியின் இயக்கத்தில் சேர்ந்தார்.
அந்த காலகட்டத்தில் ஷாவின் ஆட்சியில் கலகம் செய்வதாகக் கூறி, பலமுறை சிறையில் அடைக்கப்பட்டார். 1979ம் ஆண்டு நடந்த புரட்சியின் மூலம், ஈரான் நாட்டின் முக்கிய நபராக உருவெடுத்தார். 1981 முதல் 1989ம் ஆண்டுவரை ஈரானின் ஜனாதிபதியாக பணிபுரிந்தார். அண்டை நாடான ஈராக் மீது ஈரான் போர் தொடுத்தபோது அந்த போரை முன்னின்று நடத்தியவர் இவர்தான்.
கொமேனியின் மரணத்திற்கு பிறகு ஈரான் நாட்டின் உச்ச அரசியல் தலைவராக உருவெடுத்தார். 1989 தொடங்கி இந்த 2025 வரை ஈரான் நாட்டின் சர்வ வல்லமை பொருந்திய தனிநபராக காமெனி திகழ்கிறார். உச்ச அதிகாரத்தை வைத்து உலக நாடுகளை ஆட்டிப்படைக்கும் காமேனி, அடிப்படையில் ஒரு புத்தக காதலன் என்பது பலருக்கும் தெரியாத ஒன்றாகும்.
அறிஞர்களுடன் உரையாடுவது, நாவல்களை படிப்பது என்று இவரின் மறுபக்கம் ரசனையானது. தான் படிக்கும் நாவல்கள் குறித்து இளைஞர்களிடமும், அரசு அதிகாரிகளிடமும் சாதாரணமாக கலந்துரையாடும் அளவுக்கு புத்தகங்கள் மீது தீராத காதல் கொண்டவர். மேற்கத்திய நாடுகள் மீதுவெறுப்பு கொண்டிருந்தாலும் அதில் இருந்து நல்ல விஷயங்களை எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணமும் இவருக்குண்டு.
அமெரிக்கா, இஸ்ரேல், சவுதியின் செல்வாக்குக்கு நிகராக ஈரானை நீண்டகாலமாக நிலைநிறுத்தியதில் காமெனிக்கு முக்கிய பங்குள்ளது. லெபனானில் ஹெஸ்பொல்லா, ஈராக்கில் போராளிகள், ஏமனில் ஹவுத்திகள் மற்றும் காசாவில் ஹமாஸ் என மத்திய கிழக்கு முழுவதும் ஒரு மிகப்பெரிய நெட்வொர்க்கை நிறுவிட இவர்தான் காரணம்.
மேற்கண்ட அமைப்புகள் ஈரானின் ஆட்சிக்கு பக்கபலமாக இருந்து உதவின. ஆனால் இஸ்ரேல் ராணுவம் காஸா மற்றும் சிரியாவை சிதறடித்து இந்த நெட்வொர்க்கை வெகுவாக சேதப்படுத்தி விட்டது. தற்போதைய போரில் இஸ்ரேலை, ஈரான் இந்த அளவுக்கு இறங்கியடிக்க இதுவும் ஒரு முக்கிய காரணமாகும்.
சக்திவாய்ந்த தலைவராகத் திகழ்ந்தாலும் உள்நாட்டு கலவரங்கள் மற்றும் போராட்டங்களை ஈரானின் புரட்சிகர காவல்படையை வைத்து ஒடுக்கினார் என்ற, நீண்டகால குற்றச்சாட்டும் இவர்மீது உள்ளது. சிறுபான்மையினர் மற்றும் நாடு கடத்தப்பட்டவர்களிடம் இருந்து சொத்துக்களை அபகரித்துக் கொண்டதாகவும் இவர்மீது ஏராளமான குற்றச்சாட்டுகள் இருக்கின்றன.
இதுதவிர்த்து கைதுகள், கொலைகள், சித்திரவதை புகார்கள் என இவர்மீதான குற்றச்சாட்டுகளின் எண்ணிக்கை கன்னித்தீவு போல நீண்டுகொண்டே செல்கிறது. என்றாலும் இதனால் இவரது அதிகாரம் எந்தவகையிலும் பாதிக்கப்படவில்லை. தன்னுடைய செல்வாக்கு மற்றும் அதிகாரத்தை வைத்து நெருப்புக்கோழி பண்ணை, எண்ணெய் கம்பெனிகள், பைனான்ஸ் மற்றும் டெலிகாம் நிறுவனங்கள் ஆகியவற்றை நிர்வகித்து வருகிறார்.
இவரது தற்போதைய சொத்து மதிப்பு 82 லட்சத்து 29 ஆயிரம் கோடியாக உள்ளது. தனக்கு விசுவாசமாக செயல்படும் காவலர்களுக்கு அரசியல் மற்றும் தொழிலில் முடிவெடுக்கும் உரிமைகளை அளிக்கிறார். இஸ்ரேலுக்கு எதிரான போரை முன்னின்று நடத்தவில்லை, பதுங்கு குழிக்குள் ஒளிந்து கொண்டார் என்று எக்கச்சக்க விமர்சனங்கள் எழுந்தாலும்கூட, ஈரானின் உச்ச தளபதியாக இன்னும் அவர்தான் அதிகாரத்தில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.