ஈரான் – இஸ்ரேல் நாடுகளின் போரில், இரு நாடுகளுக்கும் ஆதரவு தெரிவிக்கும் நாடுகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்ஸ் நாடுகள் களமிறங்க, ஈரானுக்கு ஆதரவாக ரஷ்யா, வடகொரியா களத்தில் குதித்துள்ளன.
இந்தநிலையில் தடை செய்யப்பட்ட கிளஸ்டர் வகை ஏவுகணைகளை பயன்படுத்தி, ஈரான் தங்கள் மீது தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் குற்றம் சுமத்தியுள்ளது. இதுகுறித்து இஸ்ரேல், ” தடை செய்யப்பட்ட கிளஸ்டர் வகை ஏவுகணைகளை ஈரான் பயன்படுத்தி, இஸ்ரேலின் அஷோர் நகரின் மீது தாக்குதல் நடத்தியது.
சுமார் 8 கிலோமீட்டர் தூரத்திற்கு பாதிப்பு இருந்தாலும், இதனால் உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை. பயங்கரவாத நாடான ஈரான் பொதுமக்களை மோசமாக குறிவைக்கிறது,” என்று குற்றஞ்சாட்டி இருக்கிறது.
கிளஸ்டர் வகை ஏவுகணை என்பது, ஒரு ஏவுகணைக்குள் பல சிறிய வெடிபொருட்கள் அடங்கிய ஒரு வகை ஏவுகணை ஆகும்.
இந்த சிறிய வெடிபொருட்கள் இலக்கை நோக்கி ஏவப்பட்ட பிறகு, ஏவுகணையிலிருந்து பிரிந்து வெவ்வேறு திசைகளில் சென்று தாக்கும் தன்மையுடையது. இதனால், ஒரு பெரிய பரப்பளவில் உள்ள இலக்குகளை ஒரே நேரத்தில் தாக்க முடியும். இது ஒரு வகை கிளஸ்டர் வெடிகுண்டு ஆகும். இந்த வகை ஏவுகணைகள், இலக்குகளை விரைவாகவும், அதிக சேதத்துடனும் தாக்கும்.
பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளில் இந்த வகை ஏவுகணை தாக்குதல் மிகப்பெரும் விளைவுகளை ஏற்படுத்தும். வெடிக்காத வெடிகுண்டுகளால் இதன் பின்விளைவுகளும் மோசமாக இருக்கும். இந்த ஏவுகணை மனித உரிமைகளை மீறுவதாக கருதப்படுவதால், போரில் இதை பயன்படுத்த பல்வேறு நாடுகளும் எதிர்ப்பு தெரிவிக்கின்றன.
இதனால் கிளஸ்டர் ஏவுகணைகளை பயன்படுத்தக் கூடாது என்று, கடந்த 2008ம் ஆண்டு உலக நாடுகள் கூடி முடிவெடுத்தன. இதுதொடர்பான ஒப்பந்தத்தில் 111 நாடுகள் கையெழுத்திட்டன. ஆனால் இஸ்ரேல் – ஈரான் இரு நாடுகளும், இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்து போடாமல் புறக்கணித்தன. தற்போது 17 ஆண்டுகளுக்கு பிறகு, கிளஸ்டர் ஏவுகணைகளை பயன்படுத்தி ஈரான், இஸ்ரேலை தாக்கியுள்ளது.
ஒப்பந்தத்தில் கையெழுத்து போடவில்லை என்பதால், இந்த போரில் கிளஸ்டர் ஏவுகணைகளை இரண்டு நாடுகளுமே பயன்படுத்தலாம் என்று தெரிகிறது. இஸ்ரேலுக்கு எதிராக முதன்முறையாக ஈரான் இந்த கிளஸ்டர் ஏவுகணைகளை பயன்படுத்தி இருப்பதால், இரண்டு நாடுகளுக்கு இடையேயான போர் தற்போது உச்சகட்டத்தை எட்டியிருக்கிறது.
முன்னதாக கடந்த 2023ம் ஆண்டு ரஷ்யா – உக்ரைன் இடையிலான போரில், இரு நாடுகளுமே கிளஸ்டர் ஏவுகணைகளை பயன்படுத்தி, ஒன்றையொன்று தாக்கிக் கொண்டன என்பது குறிப்பிடத்தக்கது.