ஈரான் – இஸ்ரேல் இடையிலான போர் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. இந்த விஷயத்தில் இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்ஸ் ஆகிய நாடுகள் களமிறங்கி நிற்கின்றன. இந்தநிலையில் ஈரானுக்கு ஆதரவாக வடகொரியா, ரஷ்யா நாடுகள் களத்தில் குதித்துள்ளன.
ஈரான் மீதான இஸ்ரேலின் வான்வழித் தாக்குதலை வடகொரியா கண்டித்துள்ளது. இதுகுறித்து வடகொரியா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”அமெரிக்கா மற்றும் மேற்கு நாடுகளின் ஆதரவுடன் செயல்படும் இஸ்ரேல், மேற்கு ஆசியாவில் அமைதியை சீர்குலைக்கும் ‘புற்றுநோய் போன்ற நாடு’.
இஸ்ரேலின் இந்த செயல் மனிதகுலத்துக்கு எதிரான மன்னிக்க முடியாத செயல். ஒரு நாட்டின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை இஸ்ரேல் மீறியுள்ளது. உலகளாவிய அமைதி மற்றும் பாதுகாப்பை அழிப்பதில் இஸ்ரேல் முக்கிய பங்கு வகிக்கிறது,” இவ்வாறு கண்டனம் தெரிவித்துள்ளது.
இதேபோல ரஷ்யாவும், ஈரானுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக அமெரிக்காவை எச்சரித்துள்ளது.
இதுகுறித்து ரஷ்யா துணை வெளியுறவு அமைச்சர் செர்ஜி ரியாப்கோவ், ”இஸ்ரேலுக்கு, அமெரிக்கா நேரடி ராணுவ உதவி வழங்குவது மத்திய கிழக்கின் நிலைமையை தீவிரமாக சீர்குலைக்கும். இஸ்ரேலுக்கு நேரடி ராணுவ உதவி அல்லது அத்தகைய நடவடிக்கைகளை அமெரிக்கா கருத்தில் கொள்ளக் கூடாது. இது முழு சூழ்நிலையையும் தீவிரமாக சீர்குலைக்கும்,” என்று எச்சரித்து இருக்கிறார்.
அதேநேரம் இஸ்ரேல் – ஈரான் இடையிலான மோதலை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்று, ரஷ்யா – ஐக்கிய அரபு நாடுகள் வலியுறுத்தி வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.