Friday, June 20, 2025

சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்களுக்கு ஆப்பு ! முக்கிய வங்கிகள் செய்த புதிய ‘UPDATE’ !

இப்போது நாட்டில் உள்ள பெரும்பாலான வங்கிக் கணக்குக் கொண்டவர்களுக்கு இது தெரிந்திருக்கவேண்டும் – உங்கள் சேமிப்பு கணக்கிலிருந்து வரும் வட்டியில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது.

ரிசர்வ் வங்கி ஜூன் மாதத்தில் ரெப்போ விகிதத்தை 50 புள்ளிகளால் குறைத்த பிறகு, பல முன்னணி வங்கிகள், வட்டி விகிதத்தைக் கணிசமாக குறைத்துள்ளன. இதனால் இந்த ஆண்டுக்குள் மொத்தமாக 1% வட்டி விகிதம் குறைந்து விட்டது. இதன் தாக்கம் ஒட்டுமொத்த மக்களையும் நேரடியாகவே பாதிக்கக்கூடியது.

இந்தக் குறைப்பில் முதலிடம் பிடித்துள்ள வங்கி – எஸ்பிஐ. நாட்டின் மிகப்பெரிய கடன் வழங்குநரான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, ஜூன் 15-ஆம் தேதியிலிருந்து தனது சேமிப்பு கணக்குகளுக்கான வட்டியை 2.5% ஆக குறைத்துள்ளது. முன்னதாக 10 கோடிக்கு குறைவான தொகைக்கு 2.7% வட்டியும், அதற்கும் மேலான தொகைக்கு 3% வட்டியும் வழங்கப்பட்டது.

அதேபோல், HDFC வங்கியும் ஜூன் 10-ஆம் தேதி முதல் தனது வட்டியை 2.75% ஆக குறைத்துள்ளது. இதற்கு முன் ரூ.50 லட்சத்திற்கு கீழ் இருந்தவர்களுக்கு 2.75% சதவீதமும், அதற்கு மேலிருந்தவர்களுக்கு 3.25% வரையும் வழங்கப்பட்டது.

இன்னொரு முக்கிய வங்கியான ICICI வங்கியும் ஜூன் 12-ஆம் தேதி முதல் 2.75% வட்டி விகிதத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதுவும், HDFC போன்று, ரூ.50 லட்சத்திற்கு மேல் 3.25% வரை வழங்கிய வங்கி தான்.

இவை மட்டுமல்ல – மற்ற வங்கிகளும் இதே பாதையில் வந்துவிட்டன. பாங்க் ஆஃப் பரோடா 2.7% முதல் 4.25% சதவீதமும், ஃபெடரல் வங்கி 2.5% முதல் 6.25% சதவீதமும், இண்டஸ்இண்ட் வங்கி 3% முதல் 5% சதவீதமும், RBL வங்கி 3% முதல் 6.75% சதவீதமும் என வட்டி விகிதங்களை புதுப்பித்துள்ளன.

இவை அனைத்தும் ஜூன் 12 முதல் ஜூன் 17 வரை வேறுபட்ட தேதிகளில் அமலுக்கு வந்துள்ளன. மேலும், வங்கிகள் சேமிப்புக்காக மட்டுமல்லாமல், நிலையான வைப்பு விகிதங்களையும் குறைத்துள்ளன.

இதனால், பொதுமக்கள் நிதி திட்டங்களை மறுபரிசீலனை செய்ய வேண்டிய நேரம் இது. வட்டி வருவாய் குறையப்போகிறது என்பதால், முதலீட்டுத் தீர்மானங்களை சிந்தித்து, விவேகமாக எடுத்துக்கொள்ளுங்கள்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news