இரவு பகலாக ஆட்டோ ஓட்டினாலும் கூட, குடும்பத்திற்குத் தேவையான பணத்தை சம்பாதிக்க முடியவில்லை என்று, ஆட்டோ டிரைவர்கள் பலரும் புலம்புகின்றனர். இந்தநிலையில் ஆட்டோ டிரைவர் ஒருவர் நாள் முழுவதும் நின்றுகொண்டே, மாதம் ரூபாய் 8 லட்சம் வரை சம்பாதிக்கும் தகவல் வெளியாகி உள்ளது.
இதையடுத்து பிசினஸ் என்று எதையும் செய்யாமலேயே, எப்படி அவர் இவ்வளவு தொகையை சம்பாதிக்கிறார்? என்ற கேள்வி எழுந்துள்ளது. அவரின் மாத வருமானத்திற்கு முக்கிய காரணம் அமெரிக்க தூதரகம் தான். மும்பை பாந்த்ரா பகுதியில் அமெரிக்க தூதரகம் அமைந்துள்ளது.
அதற்கு வெளியே தான் அந்த ஆட்டோ டிரைவர் நாள் முழுவதும் நிற்கிறார். தூதரகத்திற்குள் பேக்கினை எடுத்துச்செல்ல அனுமதி இல்லை என்பதால், உள்ளே செல்வோர் தங்களது பேக்குகளை அந்த டிரைவரிடம் கொடுத்து செல்கின்றனர். இதற்கு வாடகையாக 1000 ரூபாயை வசூலிக்கிறார். நாளொன்றுக்கு 30 நபர்கள் வரை அவரிடம் பேக்குகளை கொடுத்து செல்கின்றனர்.
கூடுதலாக பேக்குகள் வந்தால் காவலர் ஒருவரிடம் கொடுத்து, அவரின் லாக்கரில் பத்திரப்படுத்தி வைக்கிறார். இதனால் தான் ஆட்டோ ஓட்டாமலேயே அவரால், மாதம் 5 முதல் 8 லட்சம் ரூபாய் வரை சம்பாதிக்க முடிகிறது. அவரிடம் பேக்கை ஒப்படைத்து சென்ற ராகுல் என்பவர் இதை சமூக வலைதளத்தில் பகிர, தற்போது அந்த போஸ்ட் பயங்கர வைரலாகி வருகிறது.
இதைப்பார்த்த பலரும், ” இதுபோன்ற தொழில் ஐடியாக்களை இந்தியாவில் தான் பார்க்க முடியும். புதுமையான பிசினஸ். First Time இதுபோல ஒரு பிசினஸ் பத்தி கேள்விப்படுறேன், ” என்று விதவிதமாக ஆட்டோ டிரைவரைப் பாராட்டி வருகின்றனர்.