கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே உள்ள திராசு கிராமத்தை சேர்ந்தவர் 80 வயது மூதாட்டி. இவர் நேற்று இயற்கை உபாதை கழிப்பதற்காக அதே பகுதியில் உள்ள சவுக்கு தோப்புக்கு சென்ற போது அங்கு வந்த நபர் திடீரென மூதாட்டியை தாக்கி
பாலியல் பலாத்காரம் செய்து மூதாட்டி அணிந்திருந்த ¾ பவுன் நகையை பறித்துக் கொண்டு அங்கிருந்து அந்த மர்ம நபர் தப்பி சென்றார்.
இதற்கிடையே அந்த வழியாக சென்ற பொதுமக்கள், மூதாட்டி படுகாயத்துடன் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து மூதாட்டியை மீட்டு சிகிச்சைக்காக சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் பண்ருட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணை அடிப்படையில் மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்த சுந்தரவேல் என்பவர் காடாம்புலியூர் பகுதியில் மறைந்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்ததை அடுத்து அங்கு அவரை பிடிக்க சென்ற போலீசாரை சுந்தரவேல் தாக்கியுள்ளார்.
இதில் போலீசார் தற்காத்துக் கொள்ள சுட்டது சுந்தரவேல் காலில் குண்டு பாய்ந்தது. இதனை அடுத்து பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் இது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் சுட்டு பிடிக்கப்பட்ட சுந்தரவேல் மீது ஈரோடு, திருவெண்ணெய்நல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் கொள்ளை வழக்கு உள்ளதாகவும்,மதுபோதையில் மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளதும் தெரிய வந்தது.
இச்சம்பவம் கூட்டு பாலியல் வன்கொடுமை இல்லை என தெரிவித்த அவர், சுந்தரவேலை போலீசார் பிடிக்க சென்ற தாக்குதல் நடத்தியதில் தற்காத்துக் கொள்ள போலீசார் சுட்டதில் சுந்தரவேல் காலில் குண்டு பாய்ந்தது என தெரிவித்தார் . கடலூரில் 80 வயது மூதாட்டி பாலியல் வன்கொடுமை செய்த நபர் போலீஸாரால் சுட்டு பிடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.