Monday, June 30, 2025

400+ட்ரோன்கள்!60 ஏவுகணைகள்! ரஷ்யா உக்ரைனை அடித்த பெரிய அடி!

2025 ஜூன் 29ஆம் தேதி, ஞாயிற்றுக்கிழமை அன்று, ரஷ்யா உக்ரைனுக்கு எதிராக நடத்திய வான்வழி தாக்குதல், போர் தொடங்கியதிலிருந்து நடந்த மிகப்பெரிய தாக்குதலாக இருக்கிறது. உக்ரைனின் விமானப்படை தெரிவித்ததின்படி, ஒரே இரவில் ரஷ்யா 537 வான்வழி ஆயுதங்களை ஏவியது. இதில் 477 ட்ரோன்கள் மற்றும் டிகாய் எனப்படும் திசையை மாற்ற தூண்டும் மின்னணு ஆயுதங்கள், 60 ஏவுகணைகள் உள்ளிட்டவை சேர்க்கப்பட்டுள்ளன. இதில் 249 ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன, மற்ற 226 ட்ரோன்கள் காணாமல் போயின. அவை மின்னணு தடுப்பு முறைகளால் அழிக்கப்பட்டிருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உக்ரைனின் விமானப்படை தகவல் தொடர்புத் தலைவர் யூரி இஹ்னாட் கூறும்போது, இந்த தாக்குதல், இரவு நேரத்தில் நடத்தப்பட்ட மிகப்பெரிய தாக்குதல் எனக் கருதப்பட வேண்டும் என்று கூறினார். கடந்த சில வாரங்களில் நடந்த தாக்குதல்களை விட இது அதிக சேதத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

ரஷ்யா, உக்ரைனின் முன்னணிப் பகுதிகளையே மட்டுமல்லாமல், மேற்கு உக்ரைனிலும் உள்ள பல நகரங்களையும் குறிவைத்து தாக்கியுள்ளது. இதனால் உள்நாட்டிலும் பதட்டம் அதிகரித்துள்ளது. கெர்சன் பகுதியில் ஒருவர் உயிரிழந்தார். செர்காசி பகுதியில் ஒரு சிறுவனைச் சேர்த்து ஆறு பேர் காயமடைந்துள்ளனர். கார்கிவ் நகரில் மட்டும் 18 அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் 13 தனியார் வீடுகள் சேதமடைந்துள்ளன என அங்குள்ள மேயர் தெரிவித்தார்.

இந்த தாக்குதல் போலந்திலும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. போலந்து மற்றும் அதன் நட்பு நாடுகள் தங்களின் வான்வெளி பாதுகாப்பை உறுதி செய்ய, தங்கள் விமானங்களை வானில் எழுப்பியதாக அவர்கள் தெரிவித்தனர். இது, போர் அண்டை நாடுகளுக்கும் பரவக்கூடும் என்ற அச்சத்தை உருவாக்கியுள்ளது.

இந்த மூன்று வருடங்களாக நீடித்து வரும் போருக்கு முடிவைக் காணச் செய்யும் எந்தவொரு அமைதி வாய்ப்பையும் இந்த தாக்குதல் நொறுக்கி விட்டதாக நிபுணர்கள் கூறுகிறார்கள். ரஷ்யா தொடர்ந்து உக்ரைனை மிகுந்த அழுத்தத்துடன் தாக்கி வரும் நிலையால், இந்த போர் எப்போது முடியும் என்பது இன்னும் கேள்விக்குறியாகவே உள்ளது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news