உத்தரபிரதேச மாநிலம் லக்னோ பகுதியை சேர்ந்தவர் கமல் கிஷோர். இவர் அப்பகுதியை சேர்ந்த 4 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் லக்னோ போலீசில் புகார் செய்தனர்.
அதன் பேரில் பெண் சப்-இன்ஸ்பெக்டர் சகினா கான் விசாரணை நடத்தினார். கமல் கிஷோர் இருக்கும் இடத்தை கண்டறிந்த போலீசார் கைது செய்வதற்காக விரைந்தனர். போலீசார் வருவதை கண்ட கமல் கிஷோர் தப்பி ஓட முயன்றுள்ளார். அப்போது கமல் கிஷோரை சப்-இன்ஸ்பெக்டர் சகினா கான் துப்பாக்கியால் சுட்டதில் காலில் குண்டு பாய்ந்து கீழே விழுந்தார்.
இதையடுத்து கமல் கிஷோரை கைது செய்த போலீசார் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.