இங்கிலாந்திற்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டி, வருகின்ற ஜூலை 2 தொடங்கி 6ம் தேதி வரை Edgbaston மைதானத்தில் நடைபெறுகிறது. இங்கிலாந்து தற்போது 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிப்பதால், இந்தியா 2வது போட்டியை வென்று இங்கிலாந்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.
ஆனால் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீரும், கேப்டன் சுப்மன் கில்லும் அதற்கான முயற்சிகளை எடுப்பது போல தெரியவில்லை. மாறாக இங்கிலாந்திற்கு எளிதாக வெற்றியை அளிக்கும் வகையில் தான் முடிவுகளை எடுத்து வருகின்றனர். முதல் டெஸ்டில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அபிமன்யு ஈஸ்வரனுக்கு பதிலாக, தமிழக வீரர் சாய் சுதர்சனை களமிறக்கினர். அவர் பெரிதாக ஜொலிக்கவில்லை.
இதேபோல 8 வருடங்களுக்கு பிறகு இந்திய அணியில் இடம்பிடித்த கருண் நாயரும், கிடைத்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளவில்லை. இந்தநிலையில் 2வது டெஸ்ட் போட்டியில் அதிரடியாக பும்ரா, சாய் சுதர்சன், ஷர்துல் தாகூர் மூவரையும் அணியில் இருந்து நீக்கி இருக்கிறார்களாம். சுதர்சனுக்கு பதிலாக நிதிஷ் குமார் ரெட்டி, பும்ராவிற்கு மாற்றாக குல்தீப் யாதவ் மற்றும் ஷர்துல் தாகூருக்கு பதிலாக அர்ஷ்தீப் சிங்கிற்கு வாய்ப்பளிக்க உள்ளனராம்.
சாய் சுதர்சன் ஆடிய 3வது இடத்தில் கருண் நாயரும், முதல் டெஸ்டில் கருண் ஆடிய 6வது இடத்தில் நிதிஷ் குமாரும் ஆடவிருப்பதாக தெரிகிறது. கடைசியாக Edgbaston மைதானத்தில் ஆடிய 8 டெஸ்ட் போட்டிகளில் இந்தியா 1 போட்டியை மட்டும் டிரா செய்து, 7 போட்டிகளில் தோல்வியைத் தழுவியுள்ளது. 2வது டெஸ்ட் போட்டியில் இந்தியாவை வென்று முன்னிலை பெறுவதற்காக, ஜோப்ரா ஆர்ச்சரை இங்கிலாந்து களமிறக்குகிறதாம்.
நிலைமை இப்படியிருக்க பும்ரா இல்லாமல் இந்த மைதானத்தில் இந்தியா ஆட முடிவெடுத்து, அனைவருக்கும் ஷாக் அளித்திருக்கிறது.இதைப்பார்த்த ரசிகர்கள்,” அவ்ளோ தான் கம்பீர் – கில் நம்மள மொத்தமா முடிச்சு விட்டாங்க. இந்திய டெஸ்ட் அணிக்கு பால் ஊத்தாம கம்பீர் ஓய மாட்டாரு போல, ” என்று சமூக வலைதளங்களில் விதவிதமாக விமர்சனம் செய்து வருகின்றனர்.