சென்னை போரூர் அடுத்த துண்டலம் பகுதியை சேர்ந்தவர் பிரசாந்த்(29). இவரது நண்பர்கள் அதே துண்டலம் பகுதியைச் சேர்ந்த சக்திவேல்(31) பூபதி (19.) இதில் பிரசாந்த் மதுரவாயல் பகுதி பாஜக மண்டல் தலைவராக உள்ளார்.
இந்த நிலையில் நேற்று மாலை ஐயப்பன்தாங்கல் பத்மாவதி நகர் இரண்டாவது தெருவில் இவர்கள் மூன்று பேரும் நின்று பேசிக் கொண்டிருந்தனர். அப்போது ஆட்டோ மற்றும் பைக்கில் வந்த பத்துக்கு மேற்பட்ட கொண்ட கும்பல் இந்த மூன்று பேரையும் அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதில் மூவருக்கும் தலை, கைகளில் பலத்த வெட்டுக்காயம் ஏற்பட்டது. இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் அந்த கும்பலை விரட்டி பிடிக்க முயன்றனர். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து பைக் மற்றும் ஆட்டோவில் தப்பி ஓடிவிட்டனர்.
இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. காயம் பட்டவர்களை அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மீட்டு வேலப்பன்சாவடி உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதனிடையே சம்பவம் நடந்த பகுதி போரூர் காவல் நிலையமா அல்லது வானகரம் காவல் நிலையம் என்ற எல்லை பிரச்சினை ஏற்பட்டுள்ளதால் இதை எந்த காவல் நிலைய போலீசார் விசாரிப்பது என்று குழப்பம் ஏற்பட்டது.
பின்னர் சம்பவம் நடந்த பகுதி வானகரம் காவல் நிலையத்தில் எல்லைக்கு உட்பட்ட பகுதி என்பதால் வானகரம் போலீசார் விசாரித்து வருகின்றனர். போலீசாரின் விசாரணையில், கடந்த 2024 இல் பிரசாந்துக்கும் மற்றொரு தரப்பினருக்கும் முன்விரதம் காரணமாக தகராறு இருந்து வந்துள்ளது.
இதில் அப்பகுதியில் கஞ்சா விற்பனை செய்தவர்கள் தொடர்பாக போலீசில் தகவல் கொடுத்ததால் கஞ்சா விற்றவர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். சிறையில் இருந்து வெளிவந்த அவர்கள் இவர்களை வெட்டி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. தொடர்ந்து வானகரம் போலீசார் விசாரித்து வருகின்றனர். குறிப்பாக மதுரவாயலை சேர்ந்த ரவி பாஸ்கர், சந்தோஷ் பிரசாந்த், விக்கி மற்றும் சந்தோஷ் ஆகிய நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.