பீகாரின் லக்கிசராய் மாவட்டத்தில் இன்று அதிகாலை பஞ்சாயத்துத் தலைவர் மற்றும் அவரது உதவியாளர் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கிராமத்தில் நடைபெற்ற ஒரு விழாவிலிருந்து இன்று அதிகாலை வீடு திரும்பிக்கொண்டிருந்த பஞ்சாயத்துத் தலைவர் முகியா சந்தன் சிங் மற்றும் அவரது உதவியாளர் சந்தன் குமார் ஆகியோர் இந்த கொடூர சம்பவத்திற்கு ஆளாகியுள்ளனர்.
சுமார் 1.30 மணியளவில் ஆயுதமேந்திய கும்பல் ஒன்று அவர்களை வழிமறித்து சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், ரத்த வெள்ளத்தில் கிடந்த இருவரையும் மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், அங்கு அவர்களைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர்கள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
இந்த இரட்டை கொலைக்குக் காரணம் முன்பகை தான் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.