பெண்கள் சுயமாக சம்பாதித்து வாழ்க்கை தரத்தை உயர்த்த, தமிழக அரசு தொடர்ந்து பல நல்ல முயற்சிகளை செய்து வருகிறது. இதில் முக்கியமான ஒன்று தான் கடனுதவி திட்டங்கள்.
இந்த திட்டங்களின் மூலம் ஏராளமான பெண்கள் இன்று தொழில்முனைவோராக வளர்ந்து வருகின்றனர். இந்நிலையில், ஒரு புதிய நற்செய்தி பெண்களுக்கு வரப்போகிறது.
தமிழ்நாடு அரசு, தொழில் செய்ய விரும்பும் அனைத்து பெண்களுக்கும், கடனுதவி வழங்கும் புதிய திட்டங்களை உருவாக்கி வருகிறது. இவை பெண்களுக்கு தன்னம்பிக்கையும், முன்னேற்றத்தையும் தரும்.
சமீபத்தில், தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் சார்பாக, சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு குழுக்கடன்கள் வழங்கும் திட்டம் அறிமுகமாகியுள்ளது.
இதன்படி, குழுவில் உள்ள ஒருவருக்கு அதிகபட்சமாக ₹1.25 லட்சம் வரை கடன் வழங்கப்படும். ஆண்டு வட்டி வெறும் 6% மட்டுமே. கடன் செலுத்த 2.5 ஆண்டு காலக்கெடு வழங்கப்படுகிறது.
இந்தக் குழு குறைந்தபட்சம் 6 மாதங்கள் இயங்கியிருக்க வேண்டும். மேலும் அதிகபட்சமாக 20 பேர் மட்டுமே ஒரு குழுவில் இருக்க முடியும். வயது 18 முதல் 60 வரை இருக்க வேண்டும், ஆண்டு வருமானம் ₹3 லட்சத்தை தாண்டக்கூடாது.
இப்போது, இன்னொரு பெரிய திட்டம் உருவாக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் 1 லட்சம் பெண்களை தொழில்முனைவோராக்க, ஒவ்வொருவருக்கும் ₹10 லட்சம் வரை வங்கி கடன் வழங்கும் திட்டம் சிறு, குறு, நடுத்தர தொழில் துறை மூலம் செயல்படுத்தப்படும்.
5 ஆண்டுகளில் 1 லட்சம் பெண்கள், வருடத்திற்கு 20,000 பெண்கள், இந்த திட்டத்தின் மூலம் சுய தொழில்கள் ஆரம்பிக்க முடியும். வங்கிக் கடனுக்கு கூடுதலாக, 20% அரசு மானியம் வழங்கப்படும். இதற்காக இந்த ஆண்டுக்கான பட்ஜெட்டில் ₹225 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
மேலும், திறன் மேம்பாட்டு பயிற்சிகள், விற்பனை ஆலோசனைகள் போன்ற ஆதரவுகளும் இந்த திட்டத்தில் வழங்கப்படவுள்ளன.
திட்டத்துக்கான கருத்துரு முடிவடைந்து, அரசின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது. ஒப்புதல் கிடைத்ததும், விண்ணப்பங்கள் பெறப்பட்டு, பெண்கள் விரைவில் தேர்வு செய்யப்படுவார்கள் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.