தகவல் பரிமாற்ற செயலிகளில் முன்னணி இடத்தில் உள்ள வாட்ஸ்அப், பயனர்களின் தேவைகளை கருத்தில் கொண்டு தொடர்ந்து புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தி வருகிறது.
அந்த வகையில், “Scheduled Chat” எனப்படும் புதிய வசதி விரைவில் அறிமுகமாகும் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த அம்சத்தின் மூலம், பயனர்கள் முன்கூட்டியே ஒரு செய்தியை சேமித்து வைத்து, குறிப்பிட்ட தேதி மற்றும் நேரத்தில் அது தானாகவே அனுப்பப்படும் வகையில் அமைத்துக்கொள்ள முடியும்.
இதன் உதவியால், சரியாக 12 மணிக்கு பிறந்தநாள் வாழ்த்து அனுப்புவது, திருமண நாள் வாழ்த்துகளை மறக்காமல் தெரிவிப்பது போன்றவற்றை முன்பே திட்டமிட்டு தானியங்கி முறையில் அனுப்பலாம்.
முதற்கட்டமாக இந்த வசதியை குழு உரையாடல்களில் (Group Chats) அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதன் பயன்பாடு மற்றும் வரவேற்பை பொறுத்து, பின்னர் தனிப்பட்ட உரையாடல்களுக்கும் (Personal Chats) விரிவுபடுத்தப்படலாம் என்று கூறப்படுகிறது.
தற்போது, வணிக பயன்பாட்டிற்கான பதிப்புகளில் கட்டண அடிப்படையில் Scheduled Chat வசதி வழங்கப்பட்டு வருகிறது. இதை அனைத்து பயனர்களுக்கும் இலவசமாக வழங்கும் நோக்கில் இந்த புதிய அம்சத்தை கொண்டு வர திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
