கள்ளக்குறிச்சி மாவட்டம் இந்திலி கிராமத்தைச் சேர்ந்தவர் திவ்யா. இவருக்கு கடந்த 6 ம் தேதி கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் (மகப்பேறு மருத்துவமனையில்) ஆண் குழந்தை பிறந்தது. இதனை இன்று அதிகாலை கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள நாக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த ராஜபாண்டியன் மனைவி லட்சுமி என்பவர் திருடிவிட்டு குழந்தையுடன் தப்பிக்க முயன்றார்.
அப்போது அதைக் கண்ட அங்கிருந்தவர்கள் அவரை பிடித்து குழந்தையை எங்கிருந்து எடுத்துச் செல்கிறாய் என கேட்டுள்ளனர். அதற்கு அவர் முன்னுக்குப் பின் முரணான தகவல் அளித்துள்ளார். உடனே குழந்தையை காணும் என திவ்யா பதறி போன நிலையில் லட்சுமி என்பவர் குழந்தையை திருடி சென்றது தெரியவந்தது.
உடனே அப்பகுதியில் ஒன்று கூடிய பொதுமக்கள் மற்றும் மருத்துவமனையில் இருந்தவர்கள் லட்சுமியை பிடித்து தர்ம அடி கொடுத்து கள்ளக்குறிச்சி காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். உடனடியாக வந்த காவல்துறையினர் லட்சுமி பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணையில் லட்சுமி ஆண் குழந்தையை திருடியது தெரியவந்தது.