அக்டோபர் மாதத்தில் தங்கம் விலை தொடர்ந்து அதிரடியாக உயர்ந்து வரலாறு காணாத உச்சத்தை தொட்டது. தீபாவளி பண்டிகைக்கு பிறகு தங்கம் விலை சில அளவில் குறைய தொடங்கிய நிலையில், நவம்பர் 8 அன்று 22 காரட் தங்கம் கிராமுக்கு ஒரு கிராம் ரூ.30 உயர்ந்து ரூ.11,300க்கான விலையில் விற்பனை செய்யப்பட்டது. அதே சமயம், சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.90,400 விலை நீடித்தது.
வார தொடக்கத்தில் இன்றும் தங்கம் விலை உயர்ந்து, 22 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.110 உயர்ந்து ரூ.11,410க்கும், சவரனுக்கு ரூ.880 உயர்ந்து ரூ.91,280க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 18 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூ.90 உயர்ந்து ரூ.9,515க்கும், சவரனுக்கு ரூ.720 உயர்ந்து ரூ.76,120 க்கும் விற்பனை செய்யப்பட்டுள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.2 உயர்ந்து ஒரு கிராம் ரூ.167, ஒரு கிலோ ரூ.1,67,000க்கும் விற்பனையாகிறது.
இந்நிலையில், பிரபல பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன், தனது யூடியூப் வீடியோவில், தற்போதைய உலக பொருளாதார சூழல் காரணமாக தங்கம் விலை சிறிய ஏற்றத் தாழ்வுகளுடன் இருப்பதாகக் கூறியுள்ளார். அமெரிக்கா ரொம்ப நாட்களாக பொருளாதார மந்தநிலையை எதிர்கொண்டு வருவதால், தங்கம் விலை மிக அதிகமாக குறைய வாய்ப்பு இல்லை எனவும், கிட்டத்தட்ட ரூ.1,500 முதல் 2,000 வரை சரிவது கடினம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் அவர், ‘டிரம்ப் என்னிடம் பிளான் B இருக்கிறது எனச் சொல்கிறார். இந்த வரி நிலைக்கவில்லை என்றாலும் வேறு பிளான் இருக்கிறது என்கிறார். எனவே, இந்த வர்த்தக வரி எப்படிப் போகும் என யாருக்கும் தெரியவில்லை. எனக்கும் தெரியாது’ என்றார்.
அவர் மேலும், தங்கம் விலை சரிந்தால் மற்ற சொத்துகளின் மதிப்பும் குறையக்கூடும் என எச்சரித்தார். உலகளாவிய பொருளாதார அச்சுறுத்தல்கள் மற்றும் பேஸ்புக்-ன் தாய் நிறுவனமான மெட்டாவின் கடன் நிலை, ஏஐ தொழில்நுட்ப வளர்ச்சி போன்ற காரணங்கள் இந்த நிலையை மேலும் உறுதிப்படுத்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
