ஈரானின் அணுசக்தி திட்டத்துக்காக பயன்படுத்தப்படும் யுரேனியம் செறிவூட்டும் மையம், ராணுவ தளங்கள், எண்ணெய் உற்பத்தி மையங்கள்… என இவை அனைத்தையும் திடீரென இஸ்ரேல் தாக்கியிருப்பது சர்வதேசத்தில் பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளது.
இந்த தாக்குதலில் ஈரானின் முக்கிய ராணுவ அதிகாரிகள் உட்பட பலர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இஸ்ரேலின் இந்த அதிரடி தாக்குதலுக்கு ஈரான் பதிலடி கொடுக்கத் திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே ஏவுகணைகள் தயார் நிலையில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இருநாடுகளுக்கும் இடையில் இது புதிதல்ல… பல ஆண்டுகளாக மோதல் நிலவுகிறது. ஹமாஸ், ஹெஸ்புல்லா, ஹவுதி போன்ற அமைப்புகளுக்கு ஈரான் ஆதரவு அளிக்கிறது. இவை இஸ்ரேலை தொடர்ந்து தாக்கி வரும் நிலையில், காசாவில் ஹமாஸ்க்கு எதிராக இஸ்ரேல் நடத்திய போர் இன்னும் தீவிரமாகிறதே தவிர தணியவில்லை.
ஈரானும், கடந்த வருடம் இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியது. அதற்குப் பதிலாக 100க்கும் அதிகமான இஸ்ரேல் போர் விமானங்கள் ஈரானில் நுழைந்து தாக்கின. அதன்பின் வார்த்தைப் போர் மட்டும் தான் நடந்தது. ஆனால் இப்போது நேரடி தாக்குதலாகி விட்டது.
இந்நிலையில் ஈரான், இஸ்ரேலின் இந்த தாக்குதலுக்குப் பின்னால் அமெரிக்கா உள்ளது என்று சாட்டியுள்ளது. இதனால் மூன்றுநாடுகளும் நேரடியாக சண்டைக்கு தயார் நிலையில் உள்ளன.
அமெரிக்கா இதற்கு பதிலளிக்கையில், “தாக்குதலில் எங்கள் பங்கு இல்லை” என அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ தெரிவித்தாலும், “அமெரிக்க மக்களை குறிவைக்க கூடாது!” என ஒரு கடும் வார்னிங்கையும் விடுத்துள்ளார்.
இதனால் இஸ்ரேல், ஈரான், அமெரிக்கா இடையே பதற்றம் உச்சத்தை எட்டியுள்ளது.பெரிய போர் வெடிக்குமா? அல்லது ஒரு கடுமையான அமைதி முயற்சி நடக்குமா? என்பதைப் பார்க்கும் நேரம் இதுவே!