இஸ்ரேல் – ஈரான் இரு நாடுகளுமே முன்வைத்த காலை பின்வைக்காமல் நீயா? நானா? என்று மோதி வருகின்றன. இந்த இரண்டு நாடுகளின் போரானது மூன்றாம் உலகப்போராக மாறும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே ஈரானை ஓங்கியடிக்கும், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு குறித்த தகவல்களை மக்கள் அதிகமாக இணையத்தில் தேடி வருகின்றனர்.
அந்தவகையில் பெஞ்சமின் நெதன்யாகு யார்? அவரது அரசியல் பின்னணி என்ன? என்பது குறித்து இங்கே பார்க்கலாம்.
1949ம் ஆண்டு இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் நெதன்யாகு பிறந்தார். இவரின் தாயார் Tzila Segal இஸ்ரேலில் பிறந்த யூதர். தந்தை Benzion Netanyahu போலந்து நாட்டை சேர்ந்தவர். ஜெருசலேமில் குடியேறிய பிறகு அவர் தன்னுடைய பெயரை Benzion Mileikowsky என்று மாற்றிக் கொண்டார்.
பெஞ்சமின் தந்தை ஒரு வரலாற்று ஆசிரியர். இதனால் அமெரிக்காவின் Philadelphiaவில் அவருக்கு வேலை கிடைத்தது. இதன் காரணமாக 1963ம் ஆண்டு அவர்களின் மொத்த குடும்பமும், அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்தது. தன்னுடைய 18வது வயதில் நெதன்யாகு இஸ்ரேலுக்கு திரும்பி ராணுவத்தில் சேர்ந்தார்.
அங்கு கமாண்டோ பிரிவில் 5 வருடங்கள் கேப்டனாக பணியாற்றினார். உலகப் புகழ்பெற்ற கல்லூரிகளில் ஒன்றான MITயில் ஆர்க்கிடெக்ட் பயின்று இளங்கலை பட்டம் பெற்றார். தொடர்ந்து அதே கல்லூரியில் MBA பயின்று முதுகலை பட்டம் பெற்றார். கொஞ்ச நாட்களில் அமெரிக்கா வாழ்க்கை போரடித்து போனது.
மீண்டும் தாய்நாடான இஸ்ரேலுக்கு திரும்பினார். அப்போது நடந்த ஒரு சம்பவம் இவரின் வாழ்க்கையில் முக்கிய திருப்புமுனையாக அமைந்தது. 1976ம் ஆண்டு உகாண்டாவில் கடத்தப்பட்ட விமானம் ஒன்றில் சிக்கிய பயணிகளை மீட்கும் முயற்சியில் நெதன்யாகுவின் சகோதரர், ஜோனத்தன் கொல்லப்பட்டார்.
அவரின் இறப்பு நெதன்யாகுவின் குடும்பத்தில் நீங்கா தாக்கத்தை ஏற்படுத்தியது. இஸ்ரேல் வரலாற்றில் அவரின் பெயர் பதிக்கப்பட்டது. இதனால் ஏற்பட்ட காயத்தை ஆற்றும் வகையில், சகோதரரின் நினைவாக பயங்கவரவாதத்திற்கு எதிரான இன்ஸ்டிட்யூட் ஒன்றை தொடங்கினார். தொடர்ந்து 1982ஆம் ஆண்டு வாஷிங்டனில் இஸ்ரேலின் துணைத் தூதர் என்ற பொறுப்பை பெற்றார்.
அங்கிருந்து நெதன்யாகுவின் பொதுவாழ்க்கை தொடங்கப்பட்டது. தனித்துவமான அமெரிக்க நடையில் சரளமாக பேசக்கூடிய நெதன்யாகு, அமெரிக்க தொலைக்காட்சியில் ஒரு பிரபலமான முகம் ஆனார். முக்கியமான இஸ்ரேலின் பிரதிநிதியாக தன்னை வளர்த்து கொண்டார்.
1984ம் ஆண்டு நியூயார்க்கில், ஐநாவின் இஸ்ரேலின் நிரந்திர பிரதிநிதியாக நியமிக்கப்பட்டார். 1988ம் ஆண்டு மீண்டும் நெதன்யாகு இஸ்ரேலுக்கு திரும்பினார். அவரது அரசியல் என்ட்ரி அங்கிருந்து தான் தொடங்கியது. நாடாளுமன்றத்தில் லிகுட் கட்சியின் சார்பாக வெற்றிபெற்று வெளியுறவு துணை அமைச்சரானார். அங்கிருந்து நெதன்யாகுவின் உள்நாட்டு அரசியல் தொடங்கியது.
அதன்பின் அந்த கட்சியின் தலைவராக உருவெடுத்தார். 1996ம் ஆண்டு இஸ்ரேலின் பிரதமர் யிட்சாக் ராபின் கொலை செய்யப்பட்ட பிறகு, இஸ்ரேலின் நேரடி பிரதமராக நெதன்யாகு தேர்வு செய்யப்பட்டார். அப்போது அவரின் வயது 47. இதனால் இஸ்ரேலின் இளம்பிரதமர் என்ற பெருமை அவருக்குக் கிடைத்தது. 1996 தொடங்கி 1999 வரை பிரதமராக பதவி வகித்தார்.
மீண்டும் நடைபெற்ற தேர்தலில் தோல்வியை தழுவினார். இதற்கு பின் 2009ம் ஆண்டு 2வது முறையாக இஸ்ரேல் பிரதமர் ஆனார். அதன்பிறகு அவரை அந்த பதவியில் இருந்து யாராலும் அகற்ற முடியவில்லை. 2009 தொடங்கி 2021 வரை தொடர்ச்சியாக, 4 முறை பிரதமராக தேர்வு செய்யப்பட்டு வரலாறு படைத்தார். 6வது முறையாக 2022ம் ஆண்டு பிரதமராக தேர்வு செய்யப்பட்டு பதவி வகித்து வருகிறார்.
அமெரிக்க ஆதரவுடன் காஸாவை வீழ்த்தி, ஹமாஸ் அமைப்பினை செயலிழக்க செய்த நெதன்யாகு அத்துடன் ஓயவில்லை. லெபனானில் ஹிஸ்புல்லா, ஏமனில் ஹவுதி, ஈரான் என ஒட்டுமொத்த எதிரிகளையும் அழிக்க நடவடிக்கை எடுத்து வருகிறார். ”பழிக்கு பழி ரத்தத்துக்கு ரத்தம்” என்பது தான் இவரின் தாரக மந்திரமாக இருக்கிறது.
75 வயதிலும் கூட சிறிதும் தளராமல் ஈரான் மீது தாக்குதல் நடத்தி, 3ம் உலகப்போர் வந்துவிடுமோ என்று உலக நாடுகளை அச்சத்தில் ஆழ்த்தி இருக்கிறார். மத்திய கிழக்கில் ஒரு குட்டி நாடாக இருக்கும் இஸ்ரேல் ஒட்டுமொத்த வளைகுடா நாடுகளையும் தனியாளாக எதிர்த்து நிற்கிறது. என்றாலும் அமெரிக்க உள்ளிட்ட வல்லரசு நாடுகள் இஸ்ரேலுக்கு பகிரங்கமாக ஆதரவு தெரிவித்து வருகின்றன.
இதற்கு நெதன்யாகுவின் ராஜதந்திர நடவடிக்கைகளே முக்கிய காரணமாகும். புகழின் உச்சத்தில் இருந்தாலும் இவர்மீதான குற்றச்சாட்டுகளுக்கும் பஞ்சமில்லை. 2019ம் ஆண்டு தொழிலதிபர்களிடம் இருந்து விலையுயர்ந்த பரிசுகளை பெறுகிறார். தனக்கு சாதகமாக ஊடகங்களில் செய்திகளை பிரசுரிக்க செய்கிறார். என்று நெதன்யாகு மீது லஞ்சம், நம்பிக்கை துரோகம், மோசடி வழக்குகள் தொடரப்பட்டன.
2020ம் ஆண்டு மே மாதம் பெஞ்சமின் மீது விசாரணை நடத்தப்பட்டது. மோசடி வழக்குகள் இவரின் மதிப்பை எந்தவகையிலும் குறைக்கவில்லை. குற்றச்சாட்டுகளுக்கு மத்தியிலும் ஒரே வருடத்தில் 3 தேர்தல்களில் அடுத்தடுத்து வெற்றி பெற்று அசத்தினார். இதற்கு தன்னை இஸ்ரேலின் தூதராக நெதன்யாகு கட்டமைத்து வைத்திருப்பதே முக்கிய காரணமாகும்.
2017ம் ஆண்டு அமெரிக்க ஆதரவுடன் இஸ்ரேல் மக்களின் நீண்டநாள் கோரிக்கையாக இருந்த ஜெருசலேமை மீட்டெடுத்தார். இஸ்ரேலின் தலைநகரமாக ஜெருசலேமை அமெரிக்க அதிபர் டிரம்ப் அங்கீகரித்தார். அதோடு, அரபு நாடுகளுடன் இஸ்ரேல் அமைதி ஒப்பந்தம் மேற்கொள்ளவும் டிரம்ப் உதவினார். இதன் மூலம் அமெரிக்கா, அரபு நாடுகளின் ஆதரவை இஸ்ரேல் பெற்றது.
இதனால் தான் அரபு நாடுகள் ஈரானை ஆதரிக்க முன்வரவில்லை. அமெரிக்க அதிபராக பாரக் ஒபாமா பதவியேற்ற போது அவர் பாலஸ்தீனத்திற்கு ஆதரவான நிலைப்பாட்டை கொண்டிருந்தார். 1967ல் போருக்கு முன்பாக இருந்த எல்லையை இஸ்ரேல் பின்பற்ற வேண்டும், அதன்பிறகு கட்டப்பட்ட ஆக்கிரமிப்பு கட்டமைப்புகளை இடிக்க வேண்டும் என ஒபாமா வெள்ளைமாளிகையில் பேட்டி அளித்தார்.
அடுத்த நாளே அமெரிக்கா சென்ற நெதன்யாகு வெள்ளைமாளிகையில் ஒபாமாவை சந்தித்து, யூதர்கள் குறித்தும் இஸ்ரேல் குறித்தும் விளக்கம் அளித்தார். அமெரிக்க அதிபரை வெள்ளை மாளிகையிலேயே வைத்து பாடம் எடுக்கும் தைரியம் எந்த நாட்டின் தலைவருக்கு வரும்? அதோடு தனது நாட்டின் ஒரு செண்டி மீட்டர் இடத்தை கூட திருப்பி தர முடியாது என நெதன்யாகு திட்டவட்டமாக கூறினார்.
இதற்கு சம்மதிக்காவிட்டால் அமெரிக்காவின் நிதி உதவி கிடைக்காது என ஒபாமா மிரட்டியும்கூட நெதன்யாகு பணியவில்லை. தனது பிற கூட்டாளிகள் மூலம் இஸ்ரேலை பாதுகாப்பேன் என அமெரிக்காவை எதிர்த்து நின்றார். இதுபோன்ற துணிச்சலான நடவடிக்கைகளே அவரை 6வது முறையாக இஸ்ரேல் பிரதமர் நாற்காலியில் அமர வைத்துள்ளன.
”இஸ்ரேலின் பாதுகாவலராக என்னை வரலாறு நினைவு கூற வேண்டும். இந்த பிறப்பில் இது போதும், எனக்கு” இதுதான் பெஞ்சமின் நெதன்யாகுவின் வாழ்நாள் லட்சியமாக இருக்கிறது. வருடத்துக்கு 14 கோடிக்கும் அதிகமாக சம்பளம் பெறும், நெதன்யாகுவின் மொத்த சொத்து மதிப்பு 111 கோடி ரூபாயாக உள்ளது. உலகின் பணக்கார பிரதமர்களில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.