தென்மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் அமுதா இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தென்மேற்கு வங்கக்கடலில் புயல் உருவாகியுள்ளது. இந்த புயலுக்கு ‘டிட்வா’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. சென்னைக்கு தெற்கு – தென்கிழக்கே சுமார் 700 கிலோ மீட்டர் தொலைவில் ‘டிட்வா’ புயல் மையம் கொண்டுள்ளது. இந்த புயல் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில், வடதமிழகம் புதுவை மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளை நோக்கி நகர்ந்து 30-ந்தேதி அதிகாலை கரையை கடக்கும்.
புயல் காரணமாக நாளை நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான ‘ரெட் அலர்ட்’ விடுக்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரம், சிவகங்கை, திருச்சி, அரியலூர் மற்றும் மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ‘ஆரஞ்சு அலர்ட்’ விடுக்கப்பட்டுள்ளது.
50 கிலோ மீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசக்கூடும் என்பதால் 5 நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
