ஒரு காலத்தில் இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர் என்ற பெயரை சுமந்தவர் அனில் அம்பானி. இப்போது அவர், மீண்டும் எழ முயற்சித்து வருகிறார்…
ஒரு கட்டத்தில், முகேஷ் அம்பானியை விடவும் அதிக நிகர மதிப்புடன், உலகின் 6வது பணக்காரர் என்ற இடத்தை பிடித்திருந்தவர் அனில் அம்பானி. அவரது நிகர மதிப்பு 42 பில்லியன் டாலர்… அதாவது, சுமார் 3.5 லட்சம் கோடி ரூபாய்!
ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், கேபிடல், எனர்ஜி, நேச்சுரல் ரிசோர்ஸஸ் – இவை அனைத்தும் அனிலுக்கு சொந்தமானவை. ஆனால் அந்த வெற்றிக் காலம் நிலைத்திருக்கவில்லை. மோசமான முதலீடுகள், கடுமையான போட்டி, சந்தையின் அதிரடி மாற்றங்கள் என பல காரணங்களால், அனிலின் வணிகங்கள் படிப்படியாக வீழ்ச்சியை சந்தித்தன.
அதுவும், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் – தொலைத்தொடர்பு துறையில், பெரிய இழப்புகளை சந்தித்தது. கடன்களில் மூழ்கிய வணிகங்கள் கட்டுப்பாட்டை இழந்து விட்டன. 2020-ல், லண்டன் நீதிமன்றத்தில் திவாலானவர் என்றும் தான் சொத்துகள் இல்லாதவர் என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க நேர்ந்தது.
இன்றைய நிலைமை என்ன தெரியுமா? மார்ச் 2025-ன் படி, அனில் அம்பானியின் நிகர மதிப்பு வெறும் 530 மில்லியன் டாலர், அதாவது சுமார் ரூ.4,400 கோடி மட்டுமே. இது கடந்த காலத்தின் ஒற்றை சாயலும் இல்லை. ஆனால், அதே நேரத்தில் அவரது சகோதரர் முகேஷ் அம்பானி இன்று ரூ.9.10 லட்சம் கோடி நிகர மதிப்புடன் இந்தியாவின் முன்னணி பணக்காரராக திகழ்கிறார்.
இப்போது அனில் அம்பானியின் நிறுவனங்களில் ஒன்றான ரிலையன்ஸ் கேபிடல், கடனாளிகளுக்கு திருப்பிச் செலுத்துவதற்காக விற்கப்படுகிறது. இந்துஜாஸின் இன்டஸ்இண்ட் இன்டர்நேஷனல் ஹோல்டிங்ஸ் லிமிடெட் (IIHL) தான் அதிக ஏலத்தில் பங்கேற்றது. IIHL வங்கியில் தனது பங்குகளை 15% இலிருந்து 26% ஆக அதிகரிக்க ஒப்புதல் பெற்றுள்ளது, மேலும் IRDAI இலிருந்து அனுமதி பெற்றவுடன் இந்த ஒப்பந்தம் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஒரு காலத்தில் உச்சத்திலிருந்தவர், இன்று புதிய துவக்கம் தேடும் கட்டத்தில் உள்ளார். அனில் அம்பானியின் வாழ்க்கை நிச்சயமாக ஒரு புது திருப்பத்தில் இருக்கிறது. எதிர்காலம் அவருக்கு எப்படியிருக்கும் என்பதைக் காத்திருந்து தான் பார்க்க வேண்டும்.