Friday, June 27, 2025

“கமேனியை நெருங்கிவிட்டோம்…” கொல்லும் திட்டம் பற்றி தகவல்! இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் திடுக்!

இஸ்ரேல் ஈரான் இடையேயான பிரச்சனை முடிவுக்கு வரவேண்டும் என்றால் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியை கொல்வது தான் அதற்கு வழி என இஸ்ரேல் கூறி வந்தது. இருப்பினும் இப்போது மோதல் முடிந்துவிட்ட நிலையில், கமேனி விவகாரம் குறித்து இஸ்ரேல் சில அதிர்ச்சி தகவல்களை வெளியிட்டுள்ளது. அதாவது ‘கமேனியை கொல்லும் திட்டம் இருந்தது உண்மை தான்’ எனக் கூறியுள்ள இஸ்ரேல், அவர் சுரங்க பதுங்கு குழிக்கு சென்றுவிட்டதால் தப்பிவிட்டார் என தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக இஸ்ரேல் பாதுகாப்புத் துறை அமைச்சர் காட்ஸ் (Katz) கூறுகையில், ‘கமேனி பங்கரில் பதுங்காமல் எங்கள் பார்வையில் இருந்திருந்தால், அவரை நாங்கள் கொன்றிருப்போம். கமேனி பங்கருக்குள் சென்றுவிட்டார். தனது தளபதிகளையே கூட அவர் தொடர்பு கொள்ளவில்லை. இதன் காரணமாகவே தாக்குதல் சாத்தியப்படாமல் போனது’ என்று கூறியிருப்பது சற்றே அதிர்ச்சியளிப்பதாகவே இருக்கிறது.

மேலும் அவர் மோதல் நீடித்த போது கமேனியை தீவிரமாகத் தேடியதாகவும் தங்களால் முடிந்த எல்லா ஆதாரங்களையும் வைத்துத் அலசியதாகவும் கூறினார். ஆனால், இஸ்ரேலின் நோக்கம் ஆட்சி மாற்றமல்ல என்றும் ஈரானின் தலைமையைப் பலவீனப்படுத்தி மோதலின்போது அழுத்தம் கொடுப்பதே என்றும் கூறியிருக்கிறார்.

கமேனியை கொல்லும் திட்டத்திற்கு அமெரிக்காவின் ஒப்புதல் பெறப்பட்டதா என்று அவரை கேட்டதற்கு, ‘இந்த நடவடிக்கைகளுக்கு எங்களுக்கு அனுமதி தேவையில்லை’ என்று பதிலளித்திருக்கிறார். மேலும், ஈரானின் யுரேனியம் செறிவூட்டும் தளங்களை இஸ்ரேல் அழித்தாலும் செறிவூட்டப்பட்ட யுரேனியம் எங்கு இருக்கிறது என்று தங்களுக்குத் தெரியாது என்பதை அவர் ஒப்புக்கொண்டிருந்தாலும் இஸ்ரேலின் தாக்குதல்கள் ஈரானைப் பல ஆண்டுகளுக்கு பின்னோக்கி தள்ளிவிட்டதாகத் கூறியிருக்கிறார். மேலும் அவர், ஈரான் அணு ஆயுதங்களைத் தயாரிக்க விட மாட்டோம் என்று தங்கள் முடிவை உறுதிப்படுத்தியிருக்கிறார். இதனால் அணு ஆயுத தயாரிப்பில் மீண்டும் ஈரான் ஈடுபடும் பட்சத்தில் மீண்டும் போர் மூளலாம் என்றே தெரிகிறது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news