பாகிஸ்தானுக்கு உரிய சிந்து நதி நீரை இந்தியா வழங்க மறுத்தால், இந்தியா மீது போர் தொடுக்க பாகிஸ்தான் தயார் என்று அந்த நாட்டின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் பிலாவல் பூட்டோ எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் பேசிய பிலாவல் பூட்டோ, “சிந்து நதி நீர் ஒப்பந்தத்தின் கீழ் பாகிஸ்தானுக்குக் கிடைக்க வேண்டிய தண்ணீரை இந்தியா மறுத்தால், பாகிஸ்தான் போருக்குச் செல்லும். இந்தியாவின் நடவடிக்கையை ஏற்க முடியாது. உடன்படிக்கையை சட்டவிரோதமாக இந்தியா நிறுத்தியதற்குப் பதிலடி கொடுப்போம்.
இந்தியாவுக்கு இரண்டு வாய்ப்புகள் உள்ளன. ஒன்று, தண்ணீரை நியாயமாகப் பகிர்ந்து கொள்வது; இல்லையெனில், ஆறு நதிகளிலிருந்தும் தண்ணீரை நாங்கள் பெறுவோம். இந்தியா சிந்து நதி உடன்படிக்கை முடிந்துவிட்டதாகவும், அதில் இருந்து வெளியேறிவிட்டதாகவும் கூறுவது சட்டவிரோதமானது,” என்று கூறினார்.