ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்த வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். ரஷியாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதன் மூலம் அந்த நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்த இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் உதவி செய்கின்றன என்பது டிரம்பின் குற்றச்சாட்டாக உள்ளது. இதன் காரணமாக, இந்தியாவுக்கு எதிராக 50 சதவீதத்திற்கும் அதிகமான வரியை டிரம்ப் விதித்துள்ளார்.
இந்நிலையில், ரஷியாவிடமிருந்து எண்ணெய் கொள்முதல் செய்வது தொடர்பாக இந்தியாவை டிரம்ப் மீண்டும் எச்சரித்துள்ளார்.
இது தொடர்பாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறுகையில், “ ரஷியாவிடம் இருந்து எண்ணெய் வாங்கும் விவகாரத்தில் அவர்கள் ( இந்தியா) எங்களுக்கு உதவவில்லை என்றால் வரியை நாங்கள் அதிகரிப்போம். இந்தியா எங்களை சந்தோஷப்படுத்த வேண்டும். பிரதமர் மோடி மிகச்சிறந்த மனிதர். நான் மகிழ்ச்சியாக இல்லை என்பதை மோடி அறிவார். என்னை மகிழ்ச்சிப்படுத்துவது மிகவும் முக்கியம். அவர்கள் வர்த்தகம் செய்தால், விரைவில் அவர்கள் மீது வரியை உயர்த்துவோம்” என்றார்.
