நம் பூமியின் அடுக்குகளில் என்னென்ன அதிசயங்கள் மறைந்துள்ளன என்பது குறித்து மனிதன் ஓயாமல் ஆய்வு செய்து கொண்டே இருக்கிறான். அந்த ரகசியங்களுள் ஒன்று, இப்போது வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.
ஹவாய் தீவுகளில் உள்ள எரிமலைப் பாறைகள் பற்றி சமீபத்தில் நடந்த ஒரு விஞ்ஞான ஆய்வில், பூமியின் மையப்பகுதியிலிருந்து தங்கம் மற்றும் பிற விலைமிக்க உலோகங்கள் மேலே வந்திருக்க வாய்ப்பு இருக்கிறது என்பதைக் கண்டுபிடித்திருக்கின்றனர். சுமார் நான்கு புள்ளி ஐந்து பில்லியன் ஆண்டுகளாக இந்த உலோகங்கள் பூமியின் உலோக மையத்தில் புதைந்து கிடந்தன. அந்த பகுதியில் சுமார் 3,000 கிலோமீட்டர் ஆழத்தில், பூமியின் மையம் அமைந்துள்ளது.
இந்த ஆய்வை ஜெர்மனியின் கோட்டிங்கன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் மேற்கொண்டனர். ஹவாய் எரிமலைக் குழம்பில் இருந்து பெறப்பட்ட பாறைகளை மிக நுணுக்கமான முறையில் ஆய்வு செய்து, அதில் ஒரு தனித்துவமான ருத்தேனியம் வகை ஐசோடோப்பை அதிக அளவில் கண்டுபிடித்தனர். இந்த வகை வழக்கமாக பூமியின் மேலடுக்கு பகுதியில் கிடைக்காதது. இது, அந்த உலோகப் பாறைகள் மையத்தில் இருந்தே மேலே வந்திருக்கின்றன என்பதற்குச் சான்றாக பார்க்கப்படுகிறது.
“முதல் தரவுகள் வந்தபோது நாங்கள் உண்மையில் தங்கத்தைக் கண்டறிந்துவிட்டோம்!” என்கிறார் புவி வேதியியலாளர் நில்ஸ் மெஸ்லிங். தங்கம் மட்டுமல்ல, அதைப் போல விலைமிக்க பல உலோகங்கள் பூமியின் மேல்பரப்புக்கு வெடித்தெழும் எரிமலை வாயிலாக வந்திருக்கின்றன என்பதை இந்த ஆய்வு உறுதிப்படுத்துகிறது.
இதுவரை, பூமியின் மையம் முற்றிலும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாகவே கருதப்பட்டு வந்தது. ஆனால் இந்த ஆய்வு, மையம் மற்றும் மேலடுக்கு பகுதிக்கிடையே தொடர்பு இருக்கக்கூடியதாகும் என்பதை உணர்த்துகிறது. மேலும், ருத்தேனியம் ஐசோடோப்புகள், இந்த தொடர்புகளை அறிய புதிய வழிகாட்டியாக பயன்படக்கூடியவை.
இந்தக் கண்டுபிடிப்புகள், நம் பூமியின் உள்ளமைப்பு குறித்து இப்போது வரை இல்லாத புதிய பார்வையைத் தந்துள்ளன. பூமியின் ஆழத்தில் இருந்து, ஹவாய் போன்ற தீவுகள் எவ்வாறு உருவாகின்றன, மற்றும் தங்கம் போன்ற வளங்கள் எங்கே இருந்து வந்தன என்பதற்கான விடைகளுக்கு இது ஒரு முக்கியத் தொடக்கமாக இருக்கிறது.